17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், பிரேசில் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த அரையிறுதி ஆட்டத்தில், 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ப்ரெவ்ஸ்டெர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தி அணியை வெற்றிப் பெற வைத்துள்ளார்.
ஆட்டம் ஆரம்பித்த 10-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ப்ரெவ்ஸ்டெர், அடுத்ததாக தனது 2-வது கோலை 39-வது நிமிடத்திலும், ஹாட்ரிக் கோலை 77-வது நிமிடத்திலும் அடித்து அசத்தினார்.
ஏற்கனவே, அமெரிக்காவுக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியிலும் ப்ரெவ்ஸ்டெர் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரையிறுதிப் போட்டியில் அவர் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் புரிந்துள்ளார்.
மேலும், U-17 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அரை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த பீலே-வுக்கு அடுத்ததாக ப்ரெவ்ஸ்டெர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த ப்ரெவ்ஸ்டெர் கூறுகையில், "எனது மிகப்பரிய கனவு நனவாகியுள்ளது. இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்கள் அடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. அதுவும், காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டியில் நான் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். எனது இந்தச் சாதனையை எனது தாய்க்கும், குடும்பத்திற்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.
இங்கிலாந்து பயிற்சியாளர் ஸ்டீவ் கூப்பர் கூறுகையில், "இது ஒரு அற்புதமான சாதனை. உலகக்கோப்பை காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஹாட்ரிக் கோல்கள் அடிப்பது என்பது அரிய தருணமாகும். அவரும், அணியும் இந்த சாதனைக்கு தகுதியானவர்களே. வெறும் கோல்கள் அடிப்பதோடு மட்டும் அவர் தனது பணியை முடித்துக் கொள்வதில்லை. சக வீரர்களையும் அவர் ஊக்குவித்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.