ஹர்திக் பாண்ட்யா... இன்றைய நிலையில் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். இவரது அதிரடி சிக்ஸர்களுக்கும், ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸிற்கும் தினம் தினம் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
குறிப்பாக, சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 4-1 என தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றது பாண்ட்யா தான்.
இதனால், பலரும் இவரை இந்தியாவின் அடுத்த கபில்தேவ் என்று அழைக்கத் தொடங்கினர். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, "இப்போதைக்கு பாண்ட்யாவை கபிலுடன் ஒப்பிடுவது தவறு. பாண்ட்யாவை நாம் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். இதுபோன்று எல்லாம் சொல்லி அவரை நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது" என்றார்.
கங்குலி சொன்னது மிகவும் சரியான ஒன்றே. ஒரு வீரர் ஒரு தொடரில் சிறப்பாக விளையாடியதை வைத்து, அவரை முன்னாள் ஜாம்பவான்களுடன் ஒப்பிடுவது தவறு என்றாலும், அவ்வாறு ஒப்பிடும் போது, அது அந்த வீரரை மனரீதியாக பாதிக்கும். இதனால், அவரது ஆட்டம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
இருப்பினும், ஹர்திக் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். அவரது கடுமையான உழைப்பை நாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதேபோன்று அவர் தொடர்ந்து உழைத்தால், அடுத்த கபில் தேவ் என்பதற்கு பதில், கில்கிறிஸ்ட் தோனியை சொன்னது போல் (தோனி அடுத்த கில்கிறிஸ்ட் அல்ல... இனி ஒருவர் அடுத்த தோனியாக வரவே விரும்புவார்) அடுத்த பாண்ட்யாவாக வர வேண்டும் என இளம் வீரர்கள் எண்ணும் அளவிற்கு முன்னேறலாம்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியுள்ளது. இதுகுறித்து, ஹர்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாங்கள்(இந்திய அணி) குவஹாத்திக்கு வந்திருக்கிறோம். முதன்முறையாக நான் இங்கு வந்திருக்கிறேன். ட்விட்டரில் எனது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யமாக உள்ளது. எப்போதும் என் பின்னால் இருந்து நீங்கள் என்னை வழிநடத்துகிறீர்கள். நீங்கள் எனக்கு அளிக்கும் இந்த அளப்பறியா அன்பு, என் வாழ்நாள் முழுவதும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. உண்மையில் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. இதுபோன்று தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். இந்திய அணிக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்" என்று கோரியுள்ளார்.