9 மாத கர்ப்பிணி, வளைகாப்பு தள்ளி வைப்பு… நெகிழும் இந்திய செஸ் வீராங்கனை!
India's star chess player Harika Dronavalli Tamil News: செஸ் ஒலிம்பியாட்டில் தனது பேரு காலத்தில் களமாடி இருந்த ஹரிகா, அணியினர் தன்மீது வைத்த நம்பிக்கையும், குடும்பத்தினர் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும் தீர்க்கமாக பூர்த்தி செய்தார்.
India's star chess player Harika Dronavalli Tamil News: செஸ் ஒலிம்பியாட்டில் தனது பேரு காலத்தில் களமாடி இருந்த ஹரிகா, அணியினர் தன்மீது வைத்த நம்பிக்கையும், குடும்பத்தினர் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும் தீர்க்கமாக பூர்த்தி செய்தார்.
Grandmaster Harika Dronavalli with her medal during the 44th Chess Olympiad, at Mamallapuram near Chennai (Source: Twitter/@FIDE_chess)
Grandmaster Harika Dronavalli Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்தது.
Advertisment
சுமார் 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஏ அணியும் பெற்றது.
பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ஏ அணியில் கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ் ஹரிகா துரோணவல்லி மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் இடம்பிடித்து இருந்தனர். இந்த வீராங்கனைகளில், தனது முதல் குழந்தைக்கான கர்ப்ப காலத்தில் இருந்த நட்சத்திர செஸ் வீராங்கனை ஹரிகா துரோணவல்லியும் களமாடி இருந்தார். மேலும் அவர் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நனவாக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுக்கமால் விளையாடி இருந்தார்.
Advertisment
Advertisements
கிராண்ட்மாஸ்டர் ஹரிகா தனது 9 மாத கர்ப்பத்தில் இருந்த நிலையில், அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றார். தான் இடம் பிடித்துள்ள அணி பதக்கம் வெல்ல உறுதுணையாக செயல்பட்டார். அவரின் சாதுரிய நகர்த்தல் ஆட்டம் இந்திய அணி பட்டியலில் முன்னேற உதவியது. போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று வரை அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்காக போராடினார். அவர் இடம்பிடித்த அணி தங்கம் வெல்லும் என பலரும் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், அவர்கள் அமெரிக்காவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். இதனால் அந்த அணியினருக்கு வெண்கல பதக்கமே கிடைத்தது.
எனினும், தனது பேரு காலத்தில் களமாடி இருந்த ஹரிகா, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தனது அணியினர் தன்மீது வைத்த நம்பிக்கையும், குடும்பத்தினர் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும் தீர்க்கமாக பூர்த்தி செய்தார். அவரின் உறுதியான மனநிலை, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவரது அணி முதல் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை பெற உதவியது. இறுதியில் அவரின் நீண்ட நெடிய கனவையும் நனவாக்கினார்.
ஆனால், 9 மாத கர்ப்பத்தில் இருந்த அவர் தனக்கு வளைகாப்பு வேண்டாம், பார்ட்டிகள் வேண்டாம், கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதை முன்பே முடிவு செய்தார் ஹரிகா. இவையனைத்தும் தான் ஒலிம்பியாட் பதக்கத்தை முத்தமிட்ட பிறகுதான் என்பதையும் தனது குடும்பத்தினரிடம் கூறி விட்டார். அவரின் இந்த முடிவுகளுக்கும், கடுமையான உழைப்பிற்கும் பலன் கிடைத்து விட்டது என்று அவரே கூறியிருக்கிறார்.
தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில் ஹரிகா துரோணவல்லி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றது குறித்தும், அதற்காக தான் கடந்து வந்த பாதை மற்றும் பயணம் குறித்தும் எழுதி நெகிழ்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த பதிவிற்கு அவர்கள் லைக்ஸ் மழை பொழிந்து பாராட்டி வருகின்றனர்.
"13 வயதில் இந்திய பெண்கள் சதுரங்க அணியில் நான் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 9 ஒலிம்பியாட் போட்டிகளில் விளையாடியுள்ள நான், இந்திய மகளிர் அணிக்காக மேடையில் இடம்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டு, கடைசியாக இந்த முறை வெற்றி பெற்றேன்.
"கர்ப்பத்தின் 9 மாதங்களில் நான் அதை செய்ததால் இது மிகவும் உணர்ச்சிவசமானது. இந்தியாவில் ஒலிம்பியாட் நடைபெறுவதைக் கேள்விப்பட்டபோதும், எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் விளையாடுவது சாத்தியம் என்று என் மருத்துவர் சொன்னார்.
ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதில் தான் என் வாழ்க்கை சுழன்றது. அதனால், எனது ஒவ்வொரு அடியும் அதை சாத்தியப்படுத்தவே அர்ப்பணிக்கப்பட்டது. வளைகாப்பு, பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை, பதக்கம் வென்ற பிறகுதான் எல்லாம் என்று முடிவு செய்தேன்.
நான் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக நான் ஒவ்வொரு நாளும் உழைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில மாதங்களாக நான் இந்த தருணத்திற்காக வாழ்ந்தேன். ஆம், நான் அதை செய்து முடித்தேன். இந்திய பெண்கள் சதுரங்க அணிக்கான முதல் ஒலிம்பியாட் பதக்கம்," என்று ஹரிகா துரோணவல்லி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.