விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர் பிரியிவில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், குரேஷியாவின் மரியன் சிலிச்சும் மோதினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் நோக்கத்தில் களம் இறங்கிய பெடரர், போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் மரியன் சிலிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் ரோஜர் பெடரர். விம்பிள்டன் போட்டியில் ரோஜர் பெடரர் பெறும் 8-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 8-முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் வீரரும் இவரே. அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.
35-வது வயதாகும் பெடரர், இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் பட்டத்தை அதிக வயதில் பெற்றவர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2012-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய பெடரர், அடுத்த விம்பிள்டன் பட்டத்தை பெறுவதற்கு 5-ஆண்டுகள் காத்திருந்தார். தனது 19-ம் வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரோஜர் பெடரர் வென்றார் என்பது கவனிக்கத்தக்கது.
வெற்றி குறித்து ரோஜர் பெடரர் கூறும்போது: மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தேன். இனியும் வெல்ல முடியும் என நம்புகிறேன். உண்மையாகவே இதைத் செய்யமுடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக அதனை செய்துவிட முடியும். அதைத்தான் தற்போது நான் செய்து முடித்திருக்கிறேன். 8-வது முறையாக விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றிருக்கிறேன் என்பது சிறப்பு வாய்ந்த தருணம்.
இந்த தொடரில் எந்த ஒரு சிங்கிள் செட்டை கூட இழக்காமல் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது என்னாலேயே நம்ப முடியவில்லை. மீண்டும் விம்பிள்டன் போட்டியின் ஃபைனலில் விளையேடுவேனா என்பது எனக்கு தெரியவில்லை. எனினும், நான் மீண்டும் ஃபைனலுக்கு வந்து, வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.
சில சமயங்களில் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்பது வருத்தமான நிகழ்வாக தான் இருக்கும். எனினும், இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள மரியன் சிலிச் ஒரு ஹீரோ. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.