ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதியில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, பத்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து அதிரடியாக ஆடினார். 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.
இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நசோமி ஒகுஹராவை சிந்து எதிர்கொள்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இது இவரது 3-வது பதக்கமாகும்.
ஏற்கனவே 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிந்து அளித்த பேட்டியில், "வெள்ளிப் பதக்கம் எல்லாம் எனக்கு போதாது. எனது மெடலின் நிறத்தை இன்று நான் மாற்ற விரும்புகிறேன். இறுதிப் போட்டியில் வென்று தங்கத்தை வெல்வதில் மட்டுமே எனது எண்ணம் உள்ளது. இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டால், தங்கத்தை வென்றே ஆக வேண்டும். நாட்டிற்காக என்ன வேண்டுமானாலும் நாம் செய்யலாம். இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஒகுஹராவை நான் ஏற்கனவே ஒலிம்பிக்கில் வீழ்த்தி இருந்தாலும், அவரின் ஆட்ட முறை இப்போது நிறைய மாறியிருக்கிறது. அவரது அணுகுமுறை மாறியுள்ளது, நிறைய புதிய ஷாட்களை அவர் அடிக்க ஆரம்பித்துள்ளார். எனவே, நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். தங்கத்திற்காக நான் என் இதயத்தை கூட தர தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதுவரை சிந்துவும் ஒகுஹராவும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இருவரும் 3 - 3 என வெற்றிப் பெற்று சமபலத்துடன் திகழ்கின்றனர். ஆனால், இதில் கடைசியாக விளையாடிய இரு போட்டியிலும் சிந்துவே வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று(ஞாயிறு) நடைபெற உள்ள இறுதிப் போட்டியை இந்திய ரசிகர்கள் Star Sports 1/HD 1 ஆகிய டிவி சேனல்களிலும், இணையவாசிகள் ஹாட்ஸ்டாரிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம். மாலை 6.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.