ஐபிஎல் தொடரில், இன்று மிக முக்கிய ஆட்டம் ஒன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. யாருக்கு முக்கியம்-னு பார்க்குறீங்களா...? பஞ்சாப் அணிக்கு தான்.
ஆம்! இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதுவரை 12 போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணி, 9 போட்டிகளில் வென்று கம்பீரமாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
ஆனால், 12 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில், மொத்தமுள்ள 14 போட்டிகளில், மீதமுள்ள 2 போட்டிகளையும் பஞ்சாப் வென்றாக வேண்டும். அதேசமயம், 15 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, மீதமுள்ள தனது கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்போது தான் 16 புள்ளிகள் பெற்று பஞ்சாப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே தான், மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே பஞ்சாப் சந்திக்கிறது. இது உண்மையில் மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாபிற்கு சோதனை தான்.
பாஞ்சாபின் பலம்:
வேற யாரு..! மேக்ஸ்வெல் தான். கேப்டனாகவும், வீரராகவும் தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்து வருகிறார் மேக்ஸ்வெல். அவருக்கு பக்கபலமாக கப்தில், மார்ஷ், சாஹா ஆகியோர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இப்போட்டியை வெல்லலாம். பட்! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒருவேளை இப்போட்டியில் பஞ்சாப் தோற்றால் ஹைதராபாத், கொல்கத்தா, புனே அணிகள் எந்தவித சிரமும் இன்றி, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆக, இந்தப் போட்டியை பஞ்சாப் அணி ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லையோ... ஹைதராபாத், கொல்கத்தா, புனே அணிகளின் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.