Advertisment

IND vs SL: 3 நாட்களில் இலங்கையை சுருட்டிய இந்தியா : இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

IND vs SL Live Match Score Day 2 tamil: 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
IND vs SL: 3 நாட்களில் இலங்கையை சுருட்டிய இந்தியா : இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

IND vs SL 1st  Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த டி20 போட்டியில் 3-0 என கணக்கில் இந்தியாவிடம் தொடரை பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி பங்கேற்கிறது. இதன்படி, இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முதல் தொடங்கியது.

Advertisment

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இரு அணிகள் விபரம் பின்வருமாறு:

இந்தியா:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கோனா பாரத் (விக்கெட் கீப்பர்), உமேஷ் யாதவ், சவுரப் குமார், பிரியங்க் பஞ்சால்

இலங்கை:

திமுத் கருணாரத்னே (கேப்டன்), தனஜய டி சில்வா, சரித் அசலங்கா, துஷ்மந்த சம்மீரா, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, லசித் எம்புல்தெனியா, விஷ்வ பெர்னாண்டோ, சுரங்க லக்மல், லஹிரு திரிமான்னே, லஹிரு பட்ஹூம், லஹிரு பட்ஹூம், ன்சங்க, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன

நேருக்கு நேர்

இந்தியா-இலங்கை அணிகள் மொத்தத்தில் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 17 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது.

அதிகபட்ச ஸ்கோர்:

இலங்கை-952/6 டிக்ளேர் (கொழும்பு, 1997), இந்தியா-726/9 டிக்ளேர் (மும்பை, 2009).

குறைந்த பட்ச ஸ்கோர்

இலங்கை-82 ரன் (சண்டிகார், 1990), இந்தியா- 112 ரன் (காலே, 2015).

இரு அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

தெண்டுல்கர் (இந்தியா)-1,995 ரன் (25 டெஸ்ட்)

ஜெயவர்த்தனே (இலங்கை)- 1,822 ரன் (19)

தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்

ஜெயசூர்யா-340 ரன் (கொழும்பு, 1997)

ஷேவாக் (இந்தியா)- 293 ரன் (மும்பை, 2009)

திக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்:

முத்தையா முரளிதரன் (இலங்கை)- 105 விக்கெட் (22)

அணில் கும்பிளே (இந்தியா)-74 விக்கெட் (18)

இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:

இலங்கை (பிளேயிங் லெவன்):

திமுத் கருணாரத்னே (கேப்டன்), லஹிரு திரிமான்னே, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (வீக்கெட் கீப்பர்), சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார

இந்தியா (பிளேயிங் லெவன்):

ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்படி, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

எனவே, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இதில் 6 பவுண்டரிகளை ஓட விட்ட கேப்டன் ரோகித் 29 ரன்களில் லகிரு குமாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சேர்த்து எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்தது. அப்போது ஹனுமா விகாரியும்(30), விராட் கோலியும்(15) களத்தில் இருந்தனர்.

8 ஆயிரம் ரன்களை கடந்து கோலி சாதனை

மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் விராட் கோலி 45 ரன்கள் (75 பந்துகள் 5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். 38.2வது ஓவரில் பெர்னாண்டோ வீசிய பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், இந்த நிகழ்த்திய 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

கோலியுடன் சிறப்பான ஜோடி அமைத்து விளையாடி வந்த ஹனுமா விகாரி தனது 5வது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 128 பந்துகளில் 5 பவுண்டரிகளை ஓடவிட்டு 58 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 53 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், அப்போது களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு, ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட் தனது 8 வது அரைசதத்தை பதிவு செய்தார்.

தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பண்ட் மிகச் சிறப்பாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். அவர் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரங்கா லக்மால் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 4 சிக்ஸர் 9 பவுண்டரிகள் என அதிரடி காட்டி 96 ரன்கள் சேர்த்து இருந்தார்.

பின்னர் வந்த அஸ்வின் களத்தில் இருந்த ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடியில் ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா 357 ரன்களை குவித்துள்ளது. இலங்கை அணியில் லசித் எம்புல்தெனிய அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2ம் நாள் ஆட்டம் - ஜாம்பவான் வீரர்களுக்கு அஞ்சலி!

ஆஸ்திரேலியாவின் 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.

ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் மற்றும் ரோட் மார்ஷ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்திய அணி வீரர்கள் இன்றைய நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

அஸ்வின் அரைசதம் - ஜடேஜா சதம்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவும் (45), ரவிச்சந்திரன் அஸ்வினும் (10) களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதினர். இதில் அரைசதம் கடந்து, 82 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அவர் 7வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் 130 ரன்கள் சேர்த்து, ஆட்டத்தில் இந்தியாவுக்கான திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தார்.

மறுமுனையில் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ஜடேஜா 160 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் தனது 2வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

2ம் நாள் ஆட்டம்: டிக்ளேர் செய்த இந்தியா - 466 பின்னிலையில் இலங்கை

மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 112 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 468 ரன்களை குவித்து இருந்தது. இதன் பிறகு நடந்த ஆட்டத்தில், ஜடேஜாவுடன் களத்தில் இருந்த ஜெயந்த் 2 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா 175 ரன்கள் (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), முகமது சமி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இந்திய அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணி 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது.

தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இலங்கை அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணி இந்திய அணியை விட 466 பின்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்துடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிசங்காக 61 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா பந்துவீச்சிலும், தனது திறமையை நிரூபித்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின பும்ரா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 400 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இலங்கை அணிக்கு ஃபாலோஆன் கொடுத்தது.

இதனையடுத்து 400 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கடினமான நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு மீண்டும் அதிர்ச்சியாக அமைந்தது. 9 பந்துகளை சந்தித்த தொடக்க வீரர் திரிமனே ரன்கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து கருணரத்தே 27 ரன்களும், மேத்யூஸ் 28 ரன்களும், டிசில்வா 30 ரன்களும், அசலங்கா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்

சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய டிக்வெலா அரைசதம் கடந்து 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால், இலங்கை அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 175 ரன்கள், முதல் இன்னிங்சில் 5 விக்கெட் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12-ந் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

முதல் வீரர் சாதனையை தவறவிட்ட ஜடேஜா :

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்த ஜடேஜா பந்துவீச்சில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஒரு விக்கெட்டில் ஜடேஜா தவறவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team India Vs Srilanka Ind Vs Sl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment