ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் வலுவான கேப்டனாக உருவெடுத்து இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, புனே சூப்பர் ஜெயண்ட் அணி நிர்வாகத்தால், அந்த அணிக்கு கேப்டன் ஆக்கப்பட்ட ஸ்மித். இப்போ புரியுதா! ஆங்..
சமீபத்தில் ஸ்மித் அளித்துள்ள பேட்டியில், "நான் இந்தியாவை நேசிக்கிறேன். அங்கு நீண்ட நாட்களாக விளையாடிய போது, அதனை உண்மையில் மிகவும் ரசித்தேன். நாங்கள் அடிக்கடி இந்தியா வந்திருக்கிறோம். என் தாய் நாட்டை விட்டு வெளியே வந்தால், இந்தியா தான் எனது தாய் நாடு. அந்தளவிற்கு நான் இந்தியாவை நேசிக்கின்றேன். இந்தியாவில் எனக்கென்று பிடித்த உணவகங்கள் உள்ளன. வெளியே, வெப்பம் நம்மை வாட்டினாலும், மக்களின் வரவேற்பு அதனை மறக்கச் செய்துவிடுகிறது.
குறிப்பாக, தரம்சாலாவின் அழகில் நான் திகைத்து நின்றுவிட்டேன். ஆனால், புனே தான் எனக்கு எப்போதும் ஃபேவரைட். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றால், அது புனே தான். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், இந்தியாவுக்கு எதிராக புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் நான் அடித்த சதம் தான், எனது சதங்களிலேயே மிகச் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் வென்றது மிகவும் அற்புதமானது!.
முதன்முறையாக, நான் இந்தியா வருவதற்கு முன், இந்தியா குறித்து எனக்கு உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரருக்கு, இங்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு மிகவும் சிறப்பானது. இந்தியர்களை நான் ஏன் விரும்புகிறேன் என்று ஏதேனும் ஒரு காரணத்தை என்னை சொல்ல சொன்னால், பொதுவாழ்க்கை, கிரிக்கெட், திரைப்படம் என்று அனைத்திற்கும் அவர்கள் தரும் உற்சாகம் தான் என்று சொல்வேன். ஒரு விளையாட்டுக்கு, கூட்டத்தையும் சத்தத்தையும் அனுபவிக்காமல் என் கண்களால் இந்தியாவை நீங்கள் பார்க்க முடியாது" என்றார்.