பெங்களூருவில் நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், இன்றைய போட்டியிலும் வென்று தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் உள்ளது.
அதேசமயம், தொடரை இழந்துவிட்டதால் எந்தவித பதட்டமும் இன்றி விளையாடி இப்போட்டியில் வெற்றிப் பெற ஆஸ்திரேலிய அணி தீவிரமாக உள்ளது.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு இது 100-வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் இரு மாற்றமாக விக்கெட் கீப்பர் வேட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுனர்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப், புவனேஷ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஆஸி., அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், ஃபின்ச் அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 231 ரன்கள் குவித்தனர். தனது 100-வது ஒருநாள் போட்டியில் வார்னர் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஃபின்ச் 94 ரன்களிலும், வார்னர் 124 ரன்களிலும் அவுட்டானார்கள். அதன் பின் கேப்டன் ஸ்மித் 3 ரன்னில் உமேஷ் யாதவ் ஓவரில் அவுட்டானார். இது உமேஷின் 100-வது ஒருநாள் விக்கெட்டாகும்.
முடிவில், ஹேண்ட்ஸ்கோம்ப் 43 ரன்கள் எடுக்க, ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 334 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், 10 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
பின்னர் பேட் செய்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மாவும்(65 ரன்கள்), ரஹானேயும் (53 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் விராட் கோலி (21 ரன்கள்) ஏமாற்றினாலும், முன்கூட்டியே களம் இறக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா (41 ரன்கள்), கேதர் ஜாதவ் (67 ரன்கள்), மனிஷ் பாண்டே (33 ரன்கள்) ஆகியோர் நம்பிக்கை தந்தனர். டோனி களம் இறங்கிய சிறிது நேரத்தில் மனிஷ் பாண்டே அவுட் ஆனதால், டோனி மட்டையை சுழற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு சிக்சரை அடித்த டோனி, (13 ரன்கள்) அடுத்த பந்தில் போல்ட் ஆனார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களே எடுத்தது. எனவே 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி ஜெயித்தது. எனினும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகளை இந்தியா வென்று தொடரை கைப்பற்றியதால், ஆஸிக்கு இது ஆறுதல் வெற்றி!