பெர்த் டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. போட்டியின் நடுவே இரு அணிகளும் கேப்டன்களும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டி மிக சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும், இந்தியா முதல் இன்னிங்ஸில் விராட் கோலி அடித்த சதத்தின் புண்ணியத்தால் 283 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, நான்காம் நாளான இன்று 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உஸ்மான் கவாஜாவும் - ஆஸி., கேப்டன் டிம் பெய்னும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி வந்த போது, விராட் கோலிக்கும், டிம் பெய்னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கோலி சற்று ஆவேசப்பட, அம்பயர் ஜெஃப்ரி வந்து தலையிட்டு இரு கேப்டன்களையும் சமாதானம் செய்தார்.
டிம் பெய்ன், கோலியிடம் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
டிம் பெய்ன்: "நேற்று உனது நிதானத்தை நீ இழந்துவிட்டாய். இன்று நீ நிதானமாக இருக்க முயற்சி செய்கிறாய் கோலி".
அம்பயர் க்ரிஸ் ஜெஃப்னி - "இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்,"
ஜெஃப்னி - "உங்கள் ஆட்டத்தை விளையாடுங்கள். "நீங்கள் இருவரும் கேப்டன்கள். டிம், நீங்கள் ஒரு கேப்டன்"
ஆனால், அம்பயர் சொன்னதை பெரிதாக கண்டுக் கொள்ளாத ஆஸி., கேப்டன் டிம், கோலியைப் பார்த்து, "நிதானமாக இரு கோலி" என்றார். அதற்கு கோலி ஒரு வறட்சியான சிரிப்பை பதிலளிக்க, அங்கு சிறிது நேரம் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a144-300x217.jpg)
முன்னதாக, நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, சதம் அடித்து விராட் சிறப்பாக பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது, பொய்யான அப்பீல் மற்றும் மூன்றாவது அம்பயரின் தவறான முடிவால் கோலி வெளியேற்றப்பட்டார்.
அப்போதே, செம காண்டான கோலி, பெவிலியனுக்கு செல்லும் போது ஹெல்மெட்டை தூக்கி வீசியெறிந்துச் சென்றார். அதன்பின், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கிய போது, சில இடங்களில் கோலி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகவே டிம் பெய்னுக்கும், கோலிக்கும் இன்று சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதனை கள நடுவர் ஜெஃப்னி கையாண்ட விதம் மிக அருமை.
இரு கேப்டன்களின் வார்த்தை போருக்குள் தாமதிக்காமல் நுழைந்து, மேற்கொண்டு எந்த விவாதமும் கிளம்பாத வகையில் முடித்து வைத்து, ஆட்டத்தை கண்டினியூ செய்ய வைத்த விதம் தரமானது!.
அதேசமயம், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. லோகேஷ் ராகுல் வழக்கம் போல் 0 ரன்னிலும், புஜாரா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாக, இந்தியா 287 எனும் இலக்கை எட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.