India vs England 1st Test Day 3: முதலில் இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பு, இதனை நடுநிலையாக கட்டமைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஆச்சர்யமிக்க முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இந்திய அணி எட்டியுள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுக்க, இந்திய அணி 274 ரன்கள் எடுத்துள்ளது. அதுவும், 59-3, 182-8 என்ற அதள பாதாள நிலையில் இருந்து மேலேறி வந்துள்ளது மெர்சலாக!.
காரணம்.... கேப்டன் விராட் கோலி!. 225 பந்தில் 149 ரன்கள் குவித்து, தனி ஒருவனாக, இந்திய அணியை மீட்டு கொண்டு வந்திருக்கிறார். இதில், 22 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் தவான்... வெறும் 26 ரன்கள்.
190 ரன்களுக்குள் சுருண்டு போயிருக்க வேண்டிய இந்திய அணியை, ஆக்சிலரேட் செய்து, முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் மட்டுமே இங்கிலாந்தை லீட் கொடுக்க வைத்திருக்கிறார் கோலி எனும் அஞ்சா நெஞ்சன்!.
3, 2018
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முகத்தில் சோக ரேகைகள் அப்பட்டமாக தாண்டவமாட, அதனை இந்திய ரசிகர்கள் உள்ளூர ரசிக்க, இங்கிலாந்து ரசிகர்கள் வேதனையுடன் அந்நிகழ்வை தவிர்த்தனர்.
ஆனால், உண்மையில் இந்தியா முதல் இன்னிங்ஸில், விராட் கோலியின் சதத்தால் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ஷ்டத்தினால் என்பதை, இந்திய ரசிகர்களாகிய நாம் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். கோலி 21 ரன்கள் எடுத்திருந்த போது, ஆண்டர்சன் ஓவரில் எட்ஜ் ஆக, பந்து நேராக செகண்ட் ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த டேவிட் மலன் கைகளுக்கு சென்றது. சரியான உயரத்தில் வந்த அந்த பந்தை, மலன் தவற விட்டார்.
தொடர்ந்து, கோலி 51 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்டோக்ஸ் பந்துவீச்சில், செகண்ட் ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த மலன், மீண்டும் ஒரு கேட்சை தவற விட்டார். இந்த கேட்ச் கடினமான கேட்ச் என்று, மெத்தனமான ஃபீல்டர்கள் சொல்லலாம். ஆனால், ஜாண்டி ரோட்ஸ், பாண்டிங், ஏன்... நம்ம யுவராஜ், கைஃப் போன்றவர்கள் கூட, இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் இந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தவறவிட்ட இவ்விரு வாய்ப்புகளும், இங்கிலாந்துக்கு ஏழரையாக மாற, அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட விராட் கோலி, தனக்கே உரித்தான Aggressive Temperament மற்றும் Fighting Spirit மூலம், இங்கிலாந்தை 'Nullify' செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இரண்டாம் இன்னிங்ஸில், 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணியை, Ash உட்பட நமது இந்திய பவுலர்கள் டார்ச்சர் செய்தால், இந்தியாவுக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு கூட பெட்டர் சான்ஸ் உள்ளது.
2014ல் விராட் உடபட, மொத்த இந்திய அணியும் சொதப்பிய நிகழ்வு, மீண்டும் இம்முறை அரங்கேற இருந்தது. அதிர்ஷ்டம் மற்றும் விராட் கோலி எனும் வெயிட்டான பேட்ஸ்மேனால் அது தகர்க்கப்பட்டுள்ளது. நம்ம ரசிகர்கள், 'அதெப்படி லக்கால தான் கோலி அடிச்சான்னு சொல்ல முடியும்'-னு பொத்தாம் பொதுவா கேட்பாங்க.. அதுக்காக தான், நடுநிலையாக இந்த கட்டுரை என முதல் பத்தியில் சொல்லி இருந்தேன்.
அதுமட்டுமின்றி, கோலியின் இந்த சதம், மற்ற வீரர்களுக்கு ஹை வோல்டேஜில் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கும் என்று நம்பலாம். அந்த எனர்ஜி இப்போட்டிக்கு மட்டுமல்லாது, இந்த தொடர் முழுவதிற்கும் நெடி ஏற்றும் என்றும் நம்பலாம்.
இங்கிலாந்துக்கு இனிமேல் தான் சோதனை காத்திருக்கிறது!.
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்றைய போட்டியின் Live Cricket Score Card-ஐ நீங்கள் இங்கே நேரடியாக காணலாம். அனைத்து ஸ்கோர் அப்டேட்ஸ்களும் உடனுக்குடன்.