பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
கோலி விலகல்
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நமது இணைய பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின் படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான தேர்வுக்கு கிடைக்காமல் இருப்பார். கோலியின் முடிவை வாரியம் முழுமையாக மதிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது" என்று கூறியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு, கோலி இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என்று கூறியிருந்தார். "நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே அவருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகள் அவரது இருப்பையும் பிரிக்கப்படாத கவனத்தையும் கோருகின்றன. பிசிசிஐ அவரது முடிவை மதிக்கிறது மற்றும் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் நட்சத்திர பேட்டருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது." என்று பி.சி.சி.ஐ கூறியிருந்தது.
ராகுல், ஜடேஜா சேர்ப்பு
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி காயம் காரணமாக 2வது டெஸ்டில் ஓய்வு எடுத்த கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும், அவர்களை ஆடும் லெவனில் சேர்ப்பது "உடற்தகுதிக்கு உட்பட்டது" என பி.சி.சி.ஐ குறிப்பிட்டுள்ளது. "ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுலின் பங்கேற்பு பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டது." என்றும் கூறியுள்ளது.
ஸ்ரேயாஸ் விலகல்
இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறமாட்டார். ஏற்கனவே நாம் தெரிவித்தது படி, அவர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி அவரது முன்னேற்றத்தை கண்காணிக்க உள்ளனர். முன்னோக்கி டிபெஃன்ஸ் விளையாடும் போது முதுகில் இறுக்கம் மற்றும் இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இளம் வீரருக்கு வாய்ப்பு
இந்நிலையில், மேற்கு வங்க வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணிக்கான தனது முதல் அழைப்பைப் பெற்றுள்ளார். 27 வயதான அவர் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன் ), ஜஸ்பிரித் பும்ரா (துணைகேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England: No Virat Kohli, availability of KL Rahul and Ravindra Jadeja subject to fitness
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும், நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7ம் தேதியும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“