ஆசிய அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் 2024-ம் ஆண்டுக்கான தொடர் கடந்த பிப்ரவரி 13-ந்தேதி மலேசியாவின் ஷா ஆலமில் தொடங்கியது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டமாகவும் கருதப்படும் இந்த தொடரில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள மலேசியாவும், பெண்கள் பிரிவில் இந்தோனேசியாவும் தீவிரமாக முயற்சி செய்திருந்தனர்.
இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பி.சி.சிந்து தலைமையிலும், ஆண்கள் அணி, எச்.எஸ்.பிரணாய் தலைமையிலும் களமிறங்கியுள்ளது. இரு அணிகளிலும் தலா 10 வீரர் வீரங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் கடந்த 2016-2018 ஆகிய ஆண்டுகளில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்த இந்திய அணி தற்போது சீனா மற்றும் ஹாங்காங் சீனா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது.
இந்திய மகளிர் அணி போட்டிகள் இந்தியா - சீனா
அதேபோல் பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி, சீன அணியுடன் இடம் பெற்றிருந்தது. இதில் லீக் சுற்றில், சீனாவின், ஹான்யுவுடன் மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து, 21-17,21-15 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இரட்டையர் பிரிவில், சீனாவின் ஷெங் ஷூ – டான் நிங் ஆகியோருடன் மோதிய இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ – அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் சீனாவின் வாங் ஷியிடம் முதல் சுற்றில் மோதிய இந்தியாவின் அஷ்மிதா ஷாலிகா, 21-13,21-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-2 எனற கணக்கில் பின்தங்கிய நிலையில், இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 10-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் லி யி ஜிங்-லுவோ சூ மினை ஜோடியை வீழ்த்தியது. அதன்பிறகு ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் அன்மோல் கர்ப் 22-20, 14-21, 21-18 என்ற கணக்கில் வு லுயோ யுவை வீழ்த்தினார். இதனால் லீக் சுற்றில் இந்தியா 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதி சுற்றில் இந்தியா - ஹாங்காங்
காலிறுதி போட்டியில் ஹாங்காங் அணியை சந்தித்த இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவின் பிவி சிந்து 21-7, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் லோ சின் யான் ஹேப்பியை வீழ்த்திய நிலையில், இரட்டையர் பிரிவில், தனிஷா க்ராஸ்டோ-அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-10, 21-14 என்ற செட் கணக்கில் யுங் நகா டிங்-யுங் புய் லாம் ஜோடியை வீழ்த்தினர். அடுத்து ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யுங் சும் யீயை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அரையிறுதிச்சுற்று இந்தியா – ஜப்பான்
ஆசிய அணி பேட்மிண்டன் தொடரில் முதல்முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, பலம்வாய்ந்த ஜப்பான் அணியை எதிர்கொண்டது. பரப்பபான இந்த சுற்றில் இந்திய அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்த சுற்றில் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-13,22-20 என்ற செட் கணக்கில், ஜப்பானின் அயா ஒஹோரியிடம் தோல்வியை சந்தித்தார்.
அடுத்து நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி – கோபிசந்த் ஜோடி 21-17, 16-21,22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நமி மட்சுயாமா – சிஹாரு ஷதா ஜோடியை வீழ்த்தியது. அடுத்து அமிர்தா சாலிஹா 21-17, 21-14 என்ற செட் கணக்கில், ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை வீழ்த்திய நிலையில், இரட்டையர் பிரிவில், பி.வி.சிந்து – அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-14, 21-11 என்ற செட் கணக்கில், ரெனா மியாவுரா – அயகோ சகுரமோட்டோ ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக ஆட்டம் 2-2 என்று சமநிலை பெற்ற நிலையில், கடைசி போட்டியில், இந்தியாவின் அன்மோல் கர்ப் 21-14, 21-18 என்ற செட் கணக்கில், நட்சுகி நிடாராவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியில் 3-2 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இன்று ஷா ஆலத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 3-2 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால், முதல்முறையாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தனது முதல் போட்டியில், சுபனிந்தா கத்தேதோங்கை 21-12, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நடைபெற்றது.
பி.வி.சிந்துவின் வெற்றி காரணமாக இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவில், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் ஜாலி ட்ரீசா ஜோடி ஜொங்கொல்பம் கிடிதரகுல் மற்றும் ரவ்விண்டா பிரஜோங்ஜல் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாக போராடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
𝐖𝐄 𝐀𝐑𝐄 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🥹🫶
— BAI Media (@BAI_Media) February 18, 2024
🇮🇳 women’s team has created history 🥳
Proud of you 🫡👑@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BATC2024#TeamIndia #IndiaontheRise#Badminton pic.twitter.com/0woUIiCxNK
அதே சமயம் ஜப்பானுக்கு எதிரான அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாராவை வீழ்த்திய இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா இறுதிப்போட்டியில் 11-21, 14-21 என்ற கணக்கில் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியடைந்தார். இதன்பிறகு நடந்த இரண்டாவது இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா தோல்வியடைந்தது.
அதே சமயம் உலக தரவரிசையில் 472-வது இடத்தில் உள்ள 16 வயதான அன்மோல் கர்ப், மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் போட்டியில் களமிறங்கி, உலகின் 45-ம் நிலை வீராங்கனையான போர்ன்பிச்சா சோய்கீவாங்கை நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியாவுக்கான முதல் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.