ஐபிஎல் திருவிழா வந்துவிட்டால் அவ்வளவு தான், கிரிக்கெட் ரசிகர்கள் உச்சக்கட்ட குஷியில் இருப்பார்கள். ரசிகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும் கூட, தங்களுக்கு பிடித்த வீரர் என்பதால் வெவ்வேறு கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக, தங்களது நண்பர்களுடன் அவ்வப்போது சண்டையும் இடுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும் 'த்ரில்' எதிர்பார்த்து மாலை வேலைகளில் தொலைக்காட்சியின் முன் தஞ்சம் அடையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம்.
ஒவ்வொரு அணியிலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை காண நேரடியாக மைதானத்திற்கு சென்று போட்டிகளை பார்ப்பவர்களை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட் மீதுள்ள மோகம், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போட்டி நடைபெறும் போது தங்களுக்கு பிடித்த வீரர்களை குஷிபடுத்த அவர்கள் போலவே ரசிகர்களும் வேடம் அணிந்து வருவதை பார்த்திருப்போம் நாம்.
அதுபோன்ற சம்பவம் தான் நேற்று(சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட்டில் மும்பை இண்டியன்ஸ் அணியை குஜராத் லயன்ஸ் அணி எதிர்கொண்டது. குஜராத் அணி பேட்டிங் பிடிக்க, மும்பை பந்து வீசிக்கொண்டிருந்தது. அப்போது, 15-வது ஓவரை வீச வந்த மலிங்கா மும்முரமாக பந்து வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மலிங்கா போலவே வேடமணிந்த அவரது ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தென்பட்டார்.
இதைகண்ட மலிங்கா, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், சிரித்துக்கொண்டே பந்துவீச்சில் ஈடுபட்டார். அதே போல தலைமுடி, தலைமுடியில் வண்ணம் என அச்சு அசலாக இன்னொரு மலிங்கா இருந்தது சற்று நேரம் மைதானத்தில் வேடிக்கையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
https://www.facebook.com/IPL/posts/10154582141753634
சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த பரபரப்பான போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.