இந்தூர்: இந்தூரில் இன்றிரவு 8-மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 22-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இன்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர்களில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. நடப்புத் தொடரில் மும்பை அணி முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய போதிலும், அதற்கு அடுத்து வந்த போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.
இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இன்டியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
தொடர் தொல்விகளால் பஞ்சாப் ஒருபுறம் துவண்டுள்ள நிலையில், மற்றொருபுறமோ மும்பை அணி தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணியானது மும்பை அணியுடன் இன்று மோதுகிறது.
மும்பை அணியில் முன்கள வீரர்கள் ஜொலிக்காத நிலையில், நடுக்கள மற்றும் பின்கள வீரர்கள் பேட்டிங்கிற்கு வலு சேர்த்து வருகின்றனர். தொடர்ந்து 4 போட்டிகளிலும் சோபிக்காத கேப்டன் ரோஹித் சர்மா, குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளிக்கிறார்.
இந்த தொடரில் மும்பை அணியின் இளம் வீரரான நிதிஷ் ராணா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நடப்புத் தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 193 ரன்களை குவித்துள்ளார். போலார்டும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்து வருவது மும்பை அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் 'பாண்டியா' சகோதரர்கள் அந்த அணியின் ஆல்ரவுன்டர்களாக திகழ்வதால் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது மும்பை அணி.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இன்டியன்ஸ் அணியில் பொலார்ட், நிதிஷ் ராணா, ஜோஸ் பட்லர், ஹர்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, மலிங்கா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற நட்ச்சத்திர வீரர்கள் அடங்கியுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளது என்றே கூறலாம். நடப்பு தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய பஞ்சாப் அணி, அடுத்து வந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கும் என்பதால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தொடர் வெற்றிகளை குவித்து வரும் மும்பை அணியை வீழ்த்த வேண்டுமானால், பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும். மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியில் டேவிட் மில்லர், ஹஷிம் அம்லா, மனன் வோரா, இயோன் மோர்கன் போன்ற நட்ச்சத்திர வீரர்கள் உள்ளனர். எனினும், தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா தொடந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும், மேக்ஸ்வெல், மில்லர், மோர்கன் ஆகியோர் கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்க முடியாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பஞ்சாப் அணி தங்களது பந்து வீச்சின் மூலம் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். பஞ்சாப் அணியில் இஷாந்த் சர்மா, மோகித் சர்மா, அக்சர் படேல் போன்ற பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.