இந்த ஐபிஎல்லில் தோனி மிகவும் அப்செட்டான மேட்ச் என்றால், அது கடைசியாக நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான மேட்ச் தான். தோனியின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டனர் இதர சிஎஸ்கே வீரர்கள். சிஎஸ்கே நிர்ணயித்த 177 ரன்கள் சேஸிங்கை ஒரு பந்து மீதம் வைத்து வென்றது ராஜஸ்தான். சரி.. போனது போச்சு! அடுத்து? பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று களம் காண்கிறது தோனி படை.
சென்னை சூப்பர் கிங்ஸ் கண்டிப்பாக திருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அது, முதலில் பேட்டிங் செய்ய நேரிடும் போது, முதல் 10 ஓவர்களுக்கு மேல், ரன் ரேட்டை மென்மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே. முதல் 10 ஓவர்களில் 90 - 95 ரன்கள் குவிக்கும் சிஎஸ்கே, அடுத்த 10 ஓவர்களில், 60 - 75 ரன்களையே எடுக்கிறது. இந்த சீசனில் பல போட்டிகளில் இதே போன்றதொரு பேட்டிங் சொதப்பலை சென்னை அணி அரங்கேற்றி வருகிறது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், சென்னை தோற்றதற்கு மிக முக்கிய காரணம், இறுதி 10 ஓவரில் நிகழ்த்திய மெகா சொதப்பல்ஸ் தான். இதை சரிசெய்தே ஆக வேண்டும். முதல் 10 ஓவரில் ஆடிய வேகத்தை விட, இன்னும் இரண்டு மடங்கு வேகமாக கடைசி 10 ஓவர்களில் ஆடியே ஆக வேண்டும். அப்போது தான் சிஎஸ்கே தேற முடியும். சென்னையிடம் பவுலிங் சுத்தமாக இல்லை. சிறந்த டெத் பவுலர்கள் இல்லை. பீல்டிங்கிலும் அவ்வப் போது சொதப்பல். இதுபோன்ற தவறுகளை சென்னை சூப்பர் கிங்ஸ், பேட்டிங்கால் மட்டுமே சரிக்கட்ட முடியும். அதிலும், தடுமாறினால் அணியை காப்பாற்ற முடியாது.
பொதுவாக, சிஎஸ்கே எந்த அணியையும் பார்த்து பயப்படாது. அதுதான் சென்னை அணியின் மிகப்பெரிய பலம். அந்த பலத்திற்கு ஒரே காரணம் மகேந்திர சிங் தோனி. அதற்காக, அந்த தோனியின் தலையில் எல்லா சுமையையும் இறக்கி வைத்துவிடக் கூடாது.
தோனிக்கு பிறகு பிராவோ மட்டுமே மேட்ச் வின்னராக இருக்கிறார். எனவே, தோனியின் தற்போதைய அபாரமான ஃபார்மை கருத்தில் கொண்டு, ரெய்னா இடத்தில் அவரை களம் இறக்கினால், தோனிக்கு பிறகு ரெய்னா, பிராவோ என இரு மேட்ச் வின்னர்கள் மீதம் இருப்பார்கள். இது சென்னை அணியின் பேட்டிங் வரிசையை மேலும் சற்று வலுப்படுத்தலாம்.
ஏனெனில், இன்று நாம் எதிர்கொள்ளவிருப்பது சன்ரைசர்ஸ் அணியை. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அந்த அணியை, உச்சக்கட்ட பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி மட்டுமே சிஎஸ்கேவால் வெல்ல முடியும். பந்துவீச்சால் அவர்களை சுருட்டவோ, கட்டுப்படுத்தவோ அதிகம் வாய்ப்பில்லை.
ஆக, இதுபோன்ற சில பரிசோதனை முயற்சிகளை, தோனி எனும் மிகபெரும் ஆளுமையை நம்பி தாரளாமாக செய்யலாம். ஏற்கனவே, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றிப் பெற்றுவிட்டால் பிளே ஆஃப்பிற்குள் நுழைந்துவிடலாம். ஆனால், இந்த பிரஷரை எல்லாம் மனதில் ஏற்றாமல், இன்றைய போட்டியில் வெற்றிப்பெற முனைப்போடு ஆடினால், மற்றது எல்லாம் தானாக நடக்கும்.
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்,
இலக்கை எட்டுவதில் வெற்றியடையும் சென்னை சூப்பர் கிங்ஸ், இலக்கை நிர்ணயிப்பதில் தடுமாறுகிறது!
இந்தப் பிரச்சனையை களையாவிட்டால், கோப்பையை வெல்வது கடினம்!
புனேவில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் சென்னை vs ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.