16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 16வது ஐ.பி.எல் டி20 தொடர் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மே 29) இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. பின்னர் 12.10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டி.எல்.எஸ் முறைப்படி 20 ஓவர்களில் இருந்து 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
விக்கெட்கள் விழுந்த நிலையிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சென்னை அணி 14 ஓவரில் 158 ரன்கள் பெற்றிருந்தது. 5 விக்கெட்களை இழந்திருந்தது. களத்தில் ஜடேஜா- துபே ஜோடி இருந்தனர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோஹித் சர்மா வீசிய முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ஜடேஜா நிற்க 5-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 4 ரன்கள் பெற்று சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதையடுத்து 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி பந்துகளில் வெற்றிக்கு வழிவகுத்த ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஜடேஜாவை புகழ்ந்து வருகின்றனர்.
ராபின் அய்யுடா உத்தப்பா தனது ட்விட்டர் பக்கத்தில்,"5-வது முறையாக சாம்பியன். என்ன ஒரு உற்சாகமான போட்டி. குஜராத் பையன் (ஜடேஜா) சி.எஸ்.கேவுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். சி.எஸ்.கேவுக்கு பெரிய பெரிய வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், ஜாம் நகர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 1988-ம் ஆண்டு பிறந்தவர். உள்ளூர் ஆட்டங்களில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய வந்த ஜடேஜா பின்னர் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிகளில் விளையாடத் தொடங்கினார். ஜடேஜா ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil