CSK vs LSG, Captain MS Dhoni Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக ரன்களை சேர்த்து, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி, தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் அசத்தலாக பந்துவீசியா மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆன்லைனில் புதிய உச்சம்
இந்நிலையில், ஐபிஎல் 2023-ல் நேற்றைய ஆட்டத்தில் தோனியின் பேட்டிங்கைக் காண குவிந்த ரசிகர்களால் ஆன்லைன் பார்வையாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. அதன்மூலம், சென்னையின் கேப்டன் எம்எஸ் தோனி தனது சொந்த சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளை 2023 முதல் 2027 ஆன்லைன் (ஆப்) மற்றும் இணைய பக்கங்களில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வையாகாம் 18 நிறுவனம் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் கைப்பற்றியது. அதனால், தற்போது ஐ.பி.எல் போட்டிகள் ஜியோ சினிமா ஆப் மற்றும் இணைய பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவர் முதல் 2 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 3வது பந்திலும் அவர் சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேட்ச் ஆகி அவுட் ஆனார். அவர் களத்திற்குள் புகும்முன் ஜியோ சினிமா ஆன்லைன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.3 முதல் 1.5 கோடியாக இருந்தது.
ஆனால், அவர் களத்தில் மட்டையை சுழற்றி சிக்ஸர் பறக்க விட்டபோது, அவர்களின் எண்ணிக்கை 1.7 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. முன்னதாக, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை சாதனை 1.6 கோடியாக இருந்தது. தற்போது தோனி தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil