N Jagadeesan sets new world record with 5th straight Vijay Hazare Trophy hundred, goes past Virat Kohli Tamil News
N Jagadeesan Tamil News: 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழக அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Advertisment
அருணாச்சல பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் மோதல்
இந்நிலையில், விஜய் ஹசாரே டிராபி தொடரில், பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் அருணாச்சல பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, பேட்டிங் செய்த தமிழக அணியில் சாய் சுதர்சன் - என் ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரன் மழை பொழிந்த இந்த ஜோடியில் சதம் விளாசி 102 பந்துகளில் 2 சிக்ஸர் 19 பவுண்டரிகள் தெறிக்கவிட்ட சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அவருடன் ஜோடியில் இருந்த ஜெகதீசன் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சிக்கி பந்துகளையெல்லாம் சிதறிடித்தார். சதம் விளாசி இருந்த அவர் இரட்டை சதமும் அடித்து மிரட்டினார். 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் 25 பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய ஜெகதீசன் 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. பாபா அபராஜித் 31 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தற்போது 507 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை அருணாச்சல பிரதேசம் துரத்தி வருகிறது.
தமிழ்நாடு அணி உலக சாதனை
இந்த ஆட்டத்தில் 500 ரன்கள் எடுத்ததன் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற உலக சாதனையை தமிழ்நாடு அணி படைத்துள்ளது.
லிஸ்ட் ஏ போட்டியில் அணியின் அதிகபட்ச ஸ்கோர்:
தமிழ்நாடு - 506/2 இங்கிலாந்து - 498/ 6 சர்ரே கிளப் கிரிக்கெட் அணி - 496 / 4 இங்கிலாந்து - 481 / 4 இந்தியா ஏ - 458 / 4
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் - சுதாரசன் ஜோடி 38.3 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் லிஸ்ட் ஏ போட்டிகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்கிற புதிய உலக சாதனையைப் படைத்து அசத்தினர்.
5வது சதம் அடித்து புதிய சாதனை படைத்த தமிழக வீரர்
விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தமிழக தொடக்க வீரர் என் ஜெகதீசன் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன், இந்த தொடரில் விராட் கோலி, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தட் படிகள் போன்ற வீரர்கள் தொடர்ந்து 4 சதங்களை விளாசியுள்ளனர். அவர்களின் சாதனையை தற்போது தமிழக வீரர் என் ஜெகதீசன் முறியடித்துள்ளார்.
மேலும், இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்ததன் மூலம் தமிழக வீரர் ஜெகதீசன் புதிய உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோர் என்கிற சாதனையையும், 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்துள்ளார் ஜெகதீசன்.
இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நாராயண் ஜெகதீசன் விளையாடி வந்த நிலையில், அவரை அடுத்த ஆண்டிற்கான தொடரில் அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.