எதிர்வரும் உள்நாட்டு சீசன்களில் முருகன் அஸ்வின் சண்டிகர் அணிக்காக விளையாட உள்ளார்.
M Ashwin Tamil News: தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடியவர் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின். முன்னணி வீரரான முதல் தர போட்டிகள், சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட பல போட்டிகளில் தமிழக அணி சார்பில் விளையாடி இருக்கிறார். இந்நிலையில், தமிழக அணியில் இருந்து விலகியுள்ள முருகன் அஸ்வின் சண்டிகர் அணிக்காக விளையாட உள்ளார்.
Advertisment
32 வயதான லெக்-ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 2015-16 விஜய் ஹசாரே டிராபியில் தனது முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். சையத் முஷ்டாக் அலி டி20-யில் 50 போட்டிகளில் இருந்து 55 விக்கெட்டுகளுடன் ( எக்கனாமி ரேட்6.75) தமிழ்நாட்டின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
2016 ஐ.பி.எல் சீசனுக்கு முன்னதாக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி அவரை ரூ 4.5 கோடிக்கு வாங்கியது. அடுத்த ஆண்டு 2017ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை ரூ. 1 கோடிக்கு வாங்கியது. 2018ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 2019ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 2022ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் வாங்கின. கடந்த ஆண்டு நடந்த 2023ம் ஆண்டுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது.
Advertisment
Advertisements
திடீர் விலகல் - காரணம்
தமிழக கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, இங்கு ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அணியில் ஏற்கனவே இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர். சாய் கிஷோர் மற்றும் எம். சித்தார்த் போன்ற வீரர்கள் உள்ளார்கள். இதனால், முருகன் அஸ்வினுக்கு கடந்த சில சீசன்களில் தமிழக அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த முஷ்டாக் அலியில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்த நிலையில் தான், முருகன் அஸ்வின் தற்போது தமிழக அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் வரும் உள்நாட்டு சீசனில் (2023-24) சண்டிகர் அணிக்காக விளையாடுவார்.
இதுகுறித்து முருகன் அஸ்வின் பேசுகையில், “இந்த முடிவுக்கு காரணம் நான் 3 வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்பதே. நான் எனது ஒயிட் பால் விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் சிறந்த ரிதத்தில் இருக்க எனக்கு அதிக போட்டிகள் தேவை.
நான் 12 வயதிலிருந்தே தமிழக கிரிக்கெட் அணி அமைப்பில் இருக்கிறேன், அவர்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். எனவே இப்போது ஒரு புதிய சவாலுக்கான நேரம். சண்டிகரில் ஒரு நல்ல ஒயிட்-பால் அணி உள்ளது. மேலும் அவர்களிடம் லெக் ஸ்பின்னர் இல்லாததால் நான் அவர்களுக்கு பலம் சேர்க்க முடியும் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil“