/tamil-ie/media/media_files/uploads/2017/08/z157.jpg)
19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் அமித் பான்கல், இத்தாலி வீரர் பெடெரிகோ செர்ராவை சந்தித்தார். இந்த போட்டியில் முதல்முறையாக களம் கண்ட 21 வயதான அமித் பான்கல் 4-1 என்ற புள்ளி கணக்கில் பெடெரிகோ செர்ராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அமித் பான்கல் அடுத்த சுற்றில் ஈகுவடார் வீரர் கார்லோஸ் கிய்போவை எதிர்கொள்கிறார்.
அதேபோல், 56 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் அறிமுக வீரராக களம் இறங்கிய இந்தியாவின் கவுரவ் பிதுரி 5-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குட்மேனை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 2-வது சுற்றில் கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவை சந்திக்கிறார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 69 கிலோ உடல் எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனோஜ் குமார், மோல்டோவா நாட்டைச் சேர்ந்த வசிலீ பிலோசை எதிர்கொண்டார். இதில், 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் மனோஜ் வெற்றிப் பெற்றார்.
52 கிலோ உடல் எடைப் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் கவிந்தர் பிஸ்ட் மற்றும் ஜப்பானின் யூசே பாபா ஆகியோர் மோதினர். இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கவிந்தர் வெற்றியை ருசித்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் சதீஷ் குமார், 91 கிலோ உடல் எடைப் பிரிவில், அசர்பெய்ஜன் நாட்டைச் சேர்ந்த இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மஹம்மத்ரசுல் மஜிதோவிடம் மோசமாக தோல்வியைத் தழுவினார்.
வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்து களமிறங்கிய சதீஷ் 5 - 0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.