புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் வீரர் மனோஜ் திவாரி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'-க்கு அளித்த பேட்டியில், "தங்களுடைய வழியில் தோனியும், புனே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் வித்தியாசமானவர்கள். ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவதால், சில வருடங்களாக முதிர்ச்சியுடன் செயல்படுகிறார். தனது கருத்துக்களை எப்போதும் நேரடியாக ஸ்மித் கூறிவிடுவார்.
அதேசமயம், தோனி பல சமயங்களில் ஸ்மித்துக்கு அறிவுரை வழங்குவதையும், தேவையான நேரங்களில் பவுலர்களுக்கு ஆலோசனை தருவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். பொதுவாக, தோனி களத்தில் அதிகம் பேசமாட்டார். பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் தரமாட்டார். தோனி நம் அருகில் இருப்பது எப்போதுமே சிறப்புதான். ஒரு சீனியராக அவர் எங்களுடன் இருக்கையில், அணியில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
தோனியை விமர்சிப்பது சரியல்ல...
தோனியின் சமீப ஆட்டங்களின் ரன்களை வைத்து, அவரை குறை சொல்வது அழகல்ல. எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடிய அவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக, அவரை குறை கூறுவது தவறு.
டி20 போன்ற ஆட்டங்களில் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறும். ஒரு வீரராக களத்தில் இறங்கும்போது, ஆட்டத்தின் நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப தான் விளையாட முடியும். அவர் வந்து இறங்கியவுடன், ஒவ்வொரு பந்தையும் அடித்து வெளுத்தக்கட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அணியின் நிலைமை சரியில்லாதபோது, முதலில் ஆட்டத்தை நிலைப்படுத்தி, இறுதி வரை களத்தில் நிற்கும் போது, அடித்து ஆட முடியும். வேறு சில வீரர்கள் கூட சரியாக ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், தனது வாழ்க்கையில் எப்போதும் சாம்பியனாக இருக்கும் தோனியை மட்டும் தேர்ந்தெடுத்து விமர்சனம் செய்வது அழகல்ல" என்றார்.