ஸ்டர்கார்ட்: ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு தடை காலம் முடிவடைவதையொட்டி, அவர் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கிறார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் போது மரியா ஷரபோவா தடைசெய்யப்பட்ட 'மெல்டோனியம்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க மரியா ஷரபோவாவிற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை இந்த வாரத்துடன் நிறைவடைவதையொட்டி அவர் புதன் கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார்.
இதன் மூலம் மரியா ஷரபோவா 15-மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் டென்னிஸில் களம் இறங்குகிறார். டென்னிஸ் தொடர்களில் முக்கியமான தொடர்களில் முக்கியமானதாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் மெயின் டிரா எனப்படும் நேரடியாக பங்கேற்பதற்கு அவருக்கு வைல்டு கார்டு மறுக்கப்பட்டுள்ளது. எனினும் தகுதி போட்டிகளில் பங்கேற்க ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டர்கார்ட் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஷரபோவா செல்லாவிட்டாலும், பிரெஞ்ச் ஓபன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.
போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மரியா ஷரபோவா, இத்தாலி வீராங்கனையான ராபெர்டோ வின்ஸியை எதிர்கொள்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இத்தாலி வீராங்கனை ராபெர்டோ வின்ஸி, மரியா ஷரபோவா எந்தவித உதவியை பெறாமல் களம் இறங்க வேண்டும். தலைசிறந்த வீராங்கனையான ஷரபோவா, தனது ஆட்டத்தின் மூலமே தொடர்களில் பங்கேற்க வேண்டும். மாறாக வைல்டு கார்டு அல்லது பிற உதவிகளை நாடி தொடர்களில் பங்கேற்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளர்.
வின்சியுடன் நடைபெறும் போட்டியில் மரியா ஷரபோவா வெற்றி பெறும் பட்சத்தில், 2-வது சுற்றில் போலந்தின் ரட்வன்ஸ்காவை அவர் எதிர் கொள்வார். முன்னதாக, ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கக்கூடாது என்று ரட்வன்ஸ்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.