வியட்நாம் நாட்டின் ஹோ -சீ-மின் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் மற்றும் கொரியாவின் யாங் மி கிம் ஆகியோர் மோதினர். ஆறு முறை விளையாடியதில், மேரி கோமின் ஐந்தாவது இறுதிப் போட்டி இதுவாகும். இதற்கு முன் 51 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய மேரி கோம், அனைத்திலும் பதக்கம் வென்றிருக்கிறார். தற்போது 48 கிலோ எடைப்பிரிவில் அவர் விளையாடினார். இந்த 48 கிலோ எடைப்பிரிவில் இதுதான் அவரது முதல் பதக்கமாகும். மேலும், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளுக்குப் பிறகு, மேரி கோம் கைப்பற்றும் முதல் சர்வதேச பதக்கம் இதுவேயாகும்.
ஐந்து முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றவருமான மேரி கோம், கொரிய வீராங்கனையை 5-0 என்று துவம்சம் செய்து வெற்றிப் பெற்றுள்ளார். முதல் பெல் அடிக்கப்பட்டதில் இருந்தே, இரு வீராங்கனைகளும் கடுமையாக மல்லுக்கட்டினர். போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஆனால், மேரி கோம் சிறப்பான ஃபூட்வொர்க் செய்து, யாங் மி கிம்மை தடுமாற வைத்தார்.
இருதரப்பிலும் கடுமையான குத்துகள் விடப்பட்டது. வடகொரிய வீராங்கனை இடைவிடாமல் தாக்கிக் கொண்டே இருந்தார். ஆனால், எதற்கும் அசராத மேரி கோம், தாக்குதல்களை சாமர்த்தியமாக தடுத்து, ஆக்ரோஷமாக பதில் தாக்குதல் தொடுத்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் இந்திய மங்கை மேரி கோம் வெற்றி வாகை சூடி, ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
மற்றொரு போட்டியில், 57 கிலோ எடைப்பிரிவில் மோதிய இந்திய வீராங்கனை சோனியா லாதர், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில், மேரிகோம், ஜப்பானின் சுபாசா கோமுராவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமாக தற்காப்பு ஆட்டத்தையே கடைபிடித்தனர்.
ஆனால், இரண்டாவது ரவுண்டில் இருந்து மேரி கோம் தனது அதிரடியைத் துவக்கினார். அவரை சமாளிக்க முடியாமல் சுபாசா திணறினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் மேரிகோம், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.