நேற்று (ஞாயிறு) நடந்த இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 5-0 என இலங்கையை அதன் மண்ணிலேயே வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. உலகின் எந்தவொரு அணியும், இலங்கையை இவ்வளவு மோசமாக தோற்கடித்ததில்லை. அதாவது, ஒருநாள் தொடரில், இலங்கையை இலங்கை மண்ணில் வாஷ் அவுட் செய்தது இல்லை.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 30-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (30 சதம்) கோலி சமன் செய்தார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரும் கிரிக்கெட் கடவுள் என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
இந்தநிலையில், 'சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவீர்களா?' என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கோலி, "அதற்கு மிகவும் கடுமையான முயற்சி தேவை" என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய கோலி, "சச்சின் போன்றவொரு மிகப்பெரிய சாதனையாளரின் சாதனைகளை சமன் செய்யவோ அல்லது அதனை கடக்கவோ கடுமையான முயற்சி வேண்டும். ஆனால், அதைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.
ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு வீரரின் சாதனையை எட்டுவது என்பது எனக்கு மிகப்பெரும் கவுரவம் ஆகும். இந்த இலக்கை முன்வைத்து செயல்படுவதில்லை. ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய வீரர், இந்த ஜாம்பவான்களின் சாதனையை ஒரு பேட்ஸ்மேனாக நாம் மதிப்பளிக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை, நான் 90 ரன்கள் எடுத்து விட்டு அணி வெற்றி பெற்று இருந்தால் கூட, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம் தான்" என்றார்.
சச்சின் தனது 25-வது ஒருநாள் சதத்தை எட்ட எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 240. ஆனால், விராட் கோலி எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 162.
அதேபோல் நேற்று தனது 30-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த போது, விராட் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 194. சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 267. எனவே நிச்சயம் விராட் கோலி, சச்சினின் ஒருநாள் சதங்களின் எண்ணிக்கையை (49) கடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது.