இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெற உள்ளது. ஏற்கனேவே இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றிவிட்டதால், இந்தப் போட்டியில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், ஒரு விஷயம் இந்தப் போட்டியை ரசிகர்களை ஆவலோடு எதிர்நோக்க வைத்துள்ளது. 'தல' தோனிக்கு இது 300-வது ஒருநாள் போட்டி என்பது தான் அந்த ஸ்பெஷல். ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 20-வது வீரர் நம்ம தோனி தான்.
இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 9608 ரன்கள் குவித்துள்ளார். அதுவும் பெரும்பாலும் 5-வது அல்லது 6-வது நிலை வீரராக(வேற லெவல் தல). ஒருவேளை 2-வது நிலை அல்லது 3-வது நிலை வீரராக தோனி இறங்கியிருந்தால், பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கும். இந்த 299 போட்டிகளில் 65 அரை சதங்களும், 10 சதங்களும் அடங்கும். இந்தியாவிற்கு என கேப்டனாக ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்றுக் கொடுத்தவர் தோனி.
இவ்வளவு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் தோனி நாளை நடைபெறவுள்ள தனது 300-வது ஒருநாள் போட்டியில் மேலும் இரு முக்கிய சாதனைகளை படைக்க உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா 99 ஸ்டெம்பிங் செய்து முதலிடத்தில் இருந்தார். இந்தச் சாதனையை இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோனி சமன் செய்தார். யுவேந்திர சாஹல் வீசிய ஓவரில், இலங்கையின் தனுஷ்கா குணதிலகாவை ஸ்டெம்பிங் செய்து சங்கக்காராவின் சாதனையை சமன் செய்தார் இந்திய விக்கெட் கீப்பர் தோனி.
இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவெனில், இந்தச் சாதனையை படைக்க சங்கக்காரா எடுத்த கொண்ட ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 360.
இரண்டாவது சாதனையாக, ஒருநாள் போட்டிகளில் அதிக முறை அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற பெருமையை நாளை தோனி படைக்க வாய்ப்புள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் மற்றும் இலங்கையின் சமிந்தா வாஸ் ஆகியோர் 72 போட்டிகளில் அவுட்டாகாமல் இறுதிவரை களத்தில் இருந்துள்ளனர். தோனியும் 72 போட்டிகளில் நாட்அவுட்டாக நின்று இந்தச் சாதனையை சமன் செய்திருக்கிறார். நாளைய போட்டியிலும் தோனி அவுட்டாகாமல் இருந்துவிட்டால் நம்பர்.1 இடத்தை பிடித்துவிடலாம்.
மேலே நாம் பார்த்த மற்ற இரு வீரர்களும் பவுலர்கள் தான். போட்டி முடியும் நிலையில் இறங்கி, 5 அல்லது 6 பந்துகள் பிடித்து நாட்அவுட்டாக இருந்தவர்கள். ஆனால், 'தல' தோனி பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இதுதான் உண்மையான சாதனை. தோனியின் இந்த நாட்அவுட்களில் இந்தியாவின் மேட்ச் வின்னிங் பலமுறை நிகழ்ந்துள்ளது என்பது தான் நாம் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.