வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்காக எட்டு அணிகள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. இம்முறை பங்கேற்கும் எட்டு அணிகளில் இலங்கை, பாகிஸ்தான் தவிர்த்து மற்ற 6 அணிகள் இடையே கடும் 'போர்' நடக்கும் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக இந்த சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்கும் வங்கதேசம், சமீபத்தில் டூப்லினில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அந்நிய மண் கோப்பையை முகர்ந்து வெறியேறி இருக்கின்றது.
இதனால், நடப்பு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொடர் குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி, "இம்முறை நாங்கள் பலம்வாய்ந்த ஒரு முதிர்ச்சிப் பெற்ற அணியாக களமிறங்கவுள்ளோம். இப்போது அணியில் இருக்கும் சில வீரர்கள் நான்கு வருடங்களுக்கு முன்னர் இளம் வீரர்களாக மட்டுமே இருந்தனர். இப்போது அவர்கள் மெச்சூர்டாக உள்ளனர். முதன் முறையாக எனது தலைமையில் களமிறங்கும் இந்த இந்திய அணிக்கு, தலைமைவகிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கடைசி நிலை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்தவேண்டிய தேவை நமக்குள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தோனி மீது அதிகளவிளான சுமைகள் இருந்ததாக நான் நினைக்கிறேன். இதனால், தன்னை அவரால் முற்றிலுமாக வெளிக்கொண்டு வர முடியவில்லை.
ஏனென்றால், அவருடன் இணைந்து அணியை வெற்றிக்குக் கொண்டுசெல்லக்கூடிய வீரர்கள் இல்லை. ஆனால், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர், தற்போது அந்த இடத்தில் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். இதனால், தோனியின் சுமை குறைந்துள்ளது. எங்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடிவருகிறார்கள்.
சிறந்த ஆல் ரவுண்டர்களைப் பெற்றுள்ளோம். இந்தத் தொடருக்கான சிறந்த அணியாக நாங்கள் உள்ளோம். இங்கிலாந்தில் விளையாடுவது எப்போதும் சவால்தான். ஆனால், அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.