/tamil-ie/media/media_files/uploads/2017/06/a566.jpg)
ஜகர்தா நகரில் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து 2-வது சுற்றுடன் வெளியேறி ஏமாற்றினார்கள்.
இருப்பினும், ஆண்கள் பிரிவில் 2-வது சுற்றில், முன்னாள் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் லீ சோங் வெய்க்கு அதிர்ச்சி அளித்த பிரனாய், நேற்று கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், இரட்டை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார்.
மணி 15 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், பிரனாய் 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சென் லாங்கை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். உலக தரவரிசையில் 25-வது இடதத்தில் இருக்கும் பிரனாய், தகுதி சுற்றின் மூலமே பிரதான சுற்றுக்குள் வந்தார். சென் லாங்கை அவர் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடியிருந்த 3 ஆட்டங்களிலும் தோல்வியே கண்டு இருந்தார்.
இந்த அபாரமான வெற்றி குறித்து பேட்டியளித்த பிரனாய், ‘இந்த ஆட்டம் மிகவும் கடினமாக இருந்தது. நன்றாக ஆட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன். கடைசிவரை தாக்குப்பிடித்து விளையாடியதற்கு சிறப்பான உடல்தகுதியே காரணம் என்று நினைக்கிறேன்.
இந்திய ஓபன், ஆசிய பேட்மிண்டனுக்கு பிறகு புதிய பயிற்சியாளர் முல்யோ ஹன்டோயாவின் கீழ், உடல்தகுதியை மெயின்டைன் செய்ய கடினமாக உழைக்கிறேன். அதனால் பயிற்சி முறைகளையும் மாற்றி விட்டேன். முன்பு குறுகிய நேரம் பயிற்சி செய்வேன். இப்போது 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன்’ என்றார்.
இந்நிலையில், பிரனாய் இன்று ஜப்பானின் காஜூமாசா சகாயுடன் அரையிறுதிப் போட்டியில் மோதினார். ஆக்ரோஷமாக ஆடி முதல் செட்டை 21-17 என்று பிரனாய் வென்றார். அதனால், நிச்சயம் அரையிறுதியில் வென்றுவிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், காஜுமாசா அதன்பின் மிகவும் சவாலான நிமிடங்களையே பிரனாய்க்கு பரிசளித்தார். முடிவில், 21-17, 26-28, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியை பிரனாய்க்கு பரிசளித்துவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.