புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன்(2017), கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் அறிமுகம் ஆகின.
முதல் நாளான்று தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. இதில், தெலுகு டைட்டன்ஸ் அணி 32-27 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதன்பின் நேற்று பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதிய தெலுகு டைட்டன்ஸ், 29-35 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத் கச்சிபௌலி உள்அரங்கத்தில், இன்று பெங்களூரு புல்ஸ் அணியுடன் தனது மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய தெலுகு டைட்டன்ஸ், 21-31 என்ற புள்ளிக்கணக்கில் மிகவும் மோசமாக தோற்றுள்ளது. இதனால், மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தெலுகு டைட்டன்ஸ், 2 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதே அரங்கத்தில் நடந்த மற்றொரு போட்டியில், யு மும்பா அணியும், முதன்முறையாக களமிறங்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மல்லுக் கட்டின. இதில், யு மும்பா அணி 29-28 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது. முதன்முதலாக புரோ கபடி லீக் தொடரில் களமிறங்கினாலும், எதிரணிக்கு கடும் போராட்டம் அளித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது ஹரியான ஸ்டீலர்ஸ் அணி.
முன்னதாக, தனது முதல் போட்டியில் புனேரி பால்டன் அணிக்கு எதிராக மும்பை அணி படுதோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 21-33 என்று அந்தப் போட்டியில் புனே அணி அபார வெற்றிப் பெற்றிருந்தது.