ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று நடந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.
ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து முதல் செட்டை 19-21 என இழந்தார். இதில் 11-5 என சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால், அதற்குபின் மிகவும் சிறப்பாக ஆடிய நசோமி முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டை 22-20 என்று போராடி சிந்து கைப்பற்றினார். இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி செட்டில், இருவரும் அனல் தெறிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சம அளவிலேயே புள்ளிகளை போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்றினர்.
யார் வெற்றிப் பெறுவார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, 20-22 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதி செட்டை வென்றார் நசோமி. மிகவும் கடுமையாக போராடிய சிந்து, அரங்கிலேயே அமர்ந்து ஏமாற்றத்துடன் கண்ணீர் விட்டார்.
இருப்பினும், இறுதிவரை எதிராளிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சிந்து அனைவரின் மனதையும் வென்றுவிட்டார் என்பதே உண்மை.
நசோமி தங்க பதக்கம் பெற, சிந்து வெள்ளியும், சாய்னா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். முதன்முறையாக பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.