IPL 2024 | Rishabh Pant | Shreyas Iyer | Jasprit Bumrah: 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் சென்னையில் மோத உள்ளன.
இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஐ.பி.எல் 2024 தொடருக்கான முதல் பாதி அட்டவணையை மட்டும் அறிவித்தது. அதாவது, முதல் 21 போட்டிகளின் அட்டவணையை (மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை) மட்டும் வெளியிட்டது. மீதமுள்ள போட்டிக்கான அட்டவணை விரைவில் பி.சி.சி.ஐ-யால் அறிவிக்கப்பட உள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடர் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த தொடரைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஐ.சி.சி நடத்தும் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட நினைப்பார்கள். இதேபோல், சில பல காரணங்களால் கடந்த 2023 சீசனைத் தவறவிட்ட சில இந்திய வீரர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்து, இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற ஆர்வமாக உள்ளனர்.
அந்த வகையில், கடந்த சீசனைத் தவற விட்ட, இந்த சீசனில் ஐ.பி.எல்-க்கு திரும்பும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
3. ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகு அழுத்த காயம் காரணமாக 2023 ஆம் ஆண்டு தொடரில் இருந்து விலகினார். தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் அவரை ஐ.பி.எல் 2024 சீசனில் தங்களது அணியில் களமிறக்க மும்பை இந்தியன்ஸ் ஆர்வமாக உள்ளது. பும்ரா அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடறில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அதில் அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது அதிக விக்கெட் எடுத்த வீரரானார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f9e037d6-8bc.jpg)
இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு பும்ரா எந்த ஒயிட்-பால் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. அவர் கடைசி ஆகஸ்ட் 2023 இல் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் களமாடினார்.
2. ஷ்ரேயாஸ் ஐயர்
ஐ.பி.எல் 2022 ஏலத்தில் 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், பின்னர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் 14 போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உட்பட 401 ரன்களை எடுத்த அவர், முதுகு வலி பிரச்சினை காரணமாக 2023 சீசனை தவிற விட்டார். தற்போது இந்த சீசனில் அவர் தனது அணியை வழிநடத்த தயாராகி வருகிறார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/2abd90ba-da2.jpg)
இருப்பினும், ஷ்ரேயாசுக்கு மீண்டும் முதுகு வலி பிரச்சினை குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த பிரச்சனை காரணமாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர், மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆடினார். இறுதிப் போட்டியின் போது அவருக்கு முதுகு வலி ஏற்படவே, பீல்டிங் செய்வதை மட்டும் தவிர்த்தார்.
தற்போது தனது முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்து வரும் ஷ்ரேயாஸ், இந்த சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது. அவர் கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்தார்.
1. ரிஷப் பண்ட்
ஐ.பி.எல் 2024 இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் கம்பேக் வீரர்களில் ரிஷப் பண்ட் முதன்மையானவராக உள்ளார். 2022 டிசம்பரில் அவர் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தார். அவரது வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், ஐ.பி.எல் 2023 உட்பட 15 மாதங்களுக்கு அவர் எந்தவித கிரிக்கெட்டையும் ஆடவில்லை.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/2efdd149-bad.jpg)
இருப்பினும், டெல்லி கேப்பிடல்ஸ் (டி.சி) கேப்டன் பண்ட் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் தன்னை மீட்டெடுத்துள்ளார். அவரது ஐ.பி.எல் 2024 கம்பேக்கிற்கு பி.சி.சி.ஐ-யும் கிரீன் சிக்னல் கொடுத்தது. தன்முன்னே இருந்த தடைகளை தகர்த்தெறிந்து இருக்கும் பண்ட் இந்த சீசனில் களமாட ஆவலாக உள்ளார். ஐ.பி.எல் 2024 இல் அவரது செயல்திறனைப் பொறுத்து, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“