வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னரே, பலரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் "இந்தியா Vs பாகிஸ்தான் ஃபைனல் மேட்ச்சுக்கு இப்பவே ஆஃபிஸ்ல லீவு வாங்கிட்டேன். இது தான் கான்ஃபிடண்ட் லெவல்" என்ற ரேஞ்சுக்கு பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டனர்.
அந்தளவிற்கு, இந்தியா தான் ஃபைனலுக்கு வரும் என்று ரசிகர்கள் விருப்பப்பட்டனர். ஏனெனில், அப்போதுதான் ஃபைனலில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் என்று எதிர்பார்த்தனர். சாதாரண ரசிகர்களே, இந்த இரு அணிகளின் மோதலை எதிர்பார்த்து லீவு எடுக்கிறார்கள் என்றால், கிரிக்கெட்டை ஒரு சூதாட்டமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்!
அதன் வெளிப்பாடாக, இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சூதாட்டம் இங்கிலாந்து சட்டப்பூர்வமாக இருப்பதால், எந்த அணி வெல்லும் என சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு கூறி உள்ளது.
இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக கொடுக்கப்படுமாம். அதுவே, பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஐ.சி.சி இறுதி போட்டிக்கான அணிகள் குறித்து பிக்சிங் நடைபெற்று உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அமர் சோகைல் குற்றம்சாட்டினார். 'பாகிஸ்தான் அணி இந்த வெற்றிக்காக மிக அதிகமாக மகிழ்ச்சி அடைய வேண்டியது இல்லை, ஏனென்றால் அவர்கள் இந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று நாங்கள் அறிவோம்' எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
June 2017