இந்திய மண்ணில் பரபரப்பாக அரங்கேறி வந்த 18-வது ஐ.பி.எல் டி-20 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் நடந்த இந்தத் தொடரில் 10 அணிகளில் ஆடிய இளம் வீரர்களில் சிலர் தங்களது முத்திரையை பதித்தார்கள். மூத்த வீரர்கள் பலர் தங்களது பழைய ஃபார்மை மீட்டெடுப்பது எப்படி எனத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பி.சி.சி.ஐ) ஓரம் கட்டப்பட்டு, மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் தான், பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அதுவும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 'ஆண்ட பரம்பரை' என மார் தட்டிக் கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் திமிலில் ஏறி கொம்பை பிடித்து மடக்கி, மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார். அவர்கள் 18 வருடமாக கட்டிக்காத்த சாதனையையும் தவிடு பொடியாக்கி இருக்கிறார் இந்த மாவீரன்.
/indian-express-tamil/media/post_attachments/2b9675b3-e05.jpg)
ஷ்ரேயாஸ் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என பிப்ரவரி 2024-ல் பி.சி.சி.ஐ அறிவித்தது. அதற்கு பல காரணங்கள் அப்போது சொல்லப்பட்டன. குறிப்பாக, உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஐ.பி.எல் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. அவரோ தனக்கு ஏற்பட்ட காயத்தை காரணமாக சொன்னார். அது முழுதும் குணமடையவில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அரையிறுதிப் போட்டியில் ஆட வந்தார் ஷ்ரேயாஸ்.
பிறகு மும்பை அணியை வழிநடத்தும் பொறுப்பும் அவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷ்ரேயாஸ், மும்பை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். அதேபோல் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராபியையும் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் நின்று விடாமல், 2024 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதே கையுடன் இரானி கோப்பையையும் வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ்.
இப்படியாக, தனது தொப்பியில் வெற்றிச் சிறகை சொருகிக் கொண்டிருந்த ஷ்ரேயாசை மெகா ஏலத்தில் கொல்கத்தா கை கழுவியது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை முத்தமிட்ட கொல்கத்தா, ஷ்ரேயாசை மீண்டும் அணியில் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவரை சுற்றி அணியை கட்டமைக்கவும் விருப்பும் காட்டவில்லை. ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி வசப்படுத்தியது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஷ்ரேயாஸ் ஐயரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வர திட்டம் தீட்டி ரூ. 26.75 கோடிக்கு வளைத்துப் போட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/307b10ce-a7b.jpg)
இதுபற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் பேசிய ரிக்கி பாண்டிங், இந்திய வீரர் தான் தங்களது அணியை வழிநடத்த விரும்பியதாகவும், அது ஷ்ரேயாஸ் ஐயராக இருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும் கூறியிருந்தார். ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகக் கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியை 2021 ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ரிக்கி பாண்டிங், ஷ்ரேயாஸ் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். அத்துடன் ஷ்ரேயாசின் கேப்டன்சி குறித்தும், அவரது தன்னம்பிக்கையையும் பாராட்டிப் பேசினார்.
"நீங்கள் எப்படித் தயாராகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் எல்லாம் நடக்கும். நீங்கள் நன்கு தயாராக இருந்தால், நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதற்கு இப்போது ஒரு சிறந்த உதாரணம் ஷ்ரேயாஸ். அவர் பேட்டிங் செய்ய வெளியே வருவதை நீங்கள் பார்த்தீர்கள், அவர் தன்னம்பிக்கையுடன் இருப்பதால் தன்னைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு பெருமையுடன் வெளியே பேட்டிங் ஆட வருகிறார். அவர் தனது சிறிய விஷயங்களைச் சரியாகச் செய்தால், அவர் தோல்வியடைய முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு முடிந்தவரை வலுவாக இருக்க வேண்டும். அதனால்தான் நான் ஏலத்தில் ஷ்ரேயாசை வாங்கினேன். டெல்லி அணியில் நான் அவருடன் நீண்ட காலமாக பணியாற்றி இருக்கிறேன். அவர் நான் பணியாற்றிய சிறந்த வீரர்களில் ஒருவர் மற்றும் சிறந்த மனிதர், மேலும் ஐ.பி.எல் கோப்பை வென்ற கேப்டன். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் ஒரு சிறந்த உறவு எங்களுக்கு உள்ளது." என்று ரிக்கி பாண்டிங் நெகிழ்ந்து பேசினார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 3 முறை உலகக் கோப்பை வென்று கொடுத்த ஒரு ஜாம்பவான் வீரர் இந்திய இளம் வீரர் ஒருவரை இப்படி பாராட்டிப் பேசுவது எளிதான விஷயம் இல்லை. ஒருவரிடம் திறன் இருந்தால் மட்டுமே ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவர் திரும்பி பார்ப்பார். அத்தகை வியப்புக்குரிய திறன்களை தன்னகத்தே வைத்திருக்கிறார் ஷ்ரேயாஸ்.
இந்த சீசனில் இளம் வீரர்களை கொண்ட அணியை வழிநடத்திய அவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். குறிப்பாக, பிளே-ஆஃப் முதலாவது தகுதிச் சுற்றில் பெங்களூரு அணியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது பஞ்சாப். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இந்தப் போட்டியில் அவரின் தலைமையிலான அணி கோப்பையை முத்தமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.