சிட்னியில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்ஜுக்கு எதிராக ஆஸி பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை 4வது நாள் போட்டியில் மீண்டும் இனவெறி துஷ்பிரயோகம் செய்ததால் சிட்னி மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், டி20 தொடரை இந்திய அணி வென்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி 1 போட்டியிலும் இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ஜனவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சனிக்கிழமை 3வது நாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி பார்வையாளர்கள் இனவெறி துஷ்பிரயோகம் செய்ததாக புகார் கூறினார். இது குறித்து சிராஜ்ஜும் இந்திய அணி கேப்டன் ரஹானேவும் நடுவரிம் புகார் கூறியதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், அந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், 4வது நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஃபைன் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய பார்வையாளர்கள் மீண்டும் இனவெறி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சிராஜ் புகார் கூறினார். இதையடுத்து, சிராஜ் மற்றும் ரஹானேவும் இது குறித்து நடுவர் பால் ரெய்ஃபெல்லிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 8 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் போலீசார், சிட்னி மைதானத்தில் இனவெறி துஷ்பிரயோகம் செய்ததாக சிராஜ் சுட்டிக்காட்டிய கூட்டத்தில் இருந்த 6 பேர்களை போலீசார் வெளியேற்றினார்கள்.
“கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனைத்து பாரபட்சமான நடத்தைகளையும் எல்லா வகையிலும் கண்டிக்கிறது” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நேர்மை மற்றும் பாதுகாப்புத் தலைவர் சீன் கரோல் கூறினார். “நீங்கள் இனவெறி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உங்களை வரவேற்க முடியாது.” என்று அவர் கூறினார்.
சனிக்கிழமையன்று எஸ்.சி.ஜி.யில் தெரிவிக்கப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசாரணையின் முடிவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா காத்திருக்கிறது. இனவெறி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்முடைய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்.எஸ்.டபிள்யு தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.