தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் தொடரின் 7-வது சீசனில் இன்று திண்டுக்கல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் கோவை அணிகள் மோதுகின்றன. 3 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை அணி 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
2 போட்டிகளில் விளையாடியுள்ள திருச்சி அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத நிலையில் தனது 3-வது போட்டியில் இன்று கோவை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய திருச்சி அணியில் தொடக்க வீரர் கேப்டன் ஸ்ரீதர் ராஜூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அக்ஷை சீனிவாஸ், மணி பாரதி, பெராரோ ஆகிய மூவருமே ரன்கணக்கை தொடங்காமலே வெளியேறினர். அடுத்து வந்த ஜமால் 11 ரன்களிலும், வினோத் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர்.
நிதானமாக விளையாடிய கேப்டன் ஸ்ரீதர் ராஜூ 55 பந்துகளில் 58 ரன்கள் குவித்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராஜ்குமார் 28 பந்துகளில் 31 ரன்களும், அந்தோனி தான் 9 ரன்களும்எடுத்து களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணி தரப்பில் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், கேப்டன் ஷாருக்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 118 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் சுஜய் 72 ரன்களும், ரஹ்மான் 13 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil