காரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. எட்டு அணிகளும் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் வேண்டும். லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், 16-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், காரைக்குடி காளை - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் சதீஸ், காரைக்குடி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, லோகேஷ்வர் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்தில், ஒரு ரன் மட்டும் எடுத்திருந்த நிலையில் விஷால் வைத்யா அவுட்டானார். அடுத்த களமிறங்கிய கேப்டன் பத்ரிநாத், ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ்வர் மட்டும் தாக்குப்பிடித்து ஆடி 48 ரன்கள் எடுத்தார். 46 பந்துகளில் 7 பவுண்டரிகள் மூலம் 48 ரன்கள் எடுத்த அவர், சாய்கிஷோரின் பந்து வீச்சில் அவுட்டானார்.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சாய் கிஷோர் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு காரைக்குடி அணி 110 ரன்கள் எடுத்திருந்தது. 111 ரன்கள் எடுத்தால் எவ்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 14.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கோபிநாத் 45 ரன்களுடனும், கேப்டன் சதீஷ் 26 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தனது மூன்றாவது வெற்றியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலிலும் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.