காரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. எட்டு அணிகளும் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் வேண்டும். லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அனிருதாவும், விஷால் வைத்யாவும் தலா 1 ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பத்ரிநாத் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதேபோல், ஸ்ரீனிவாசன், கணபதி ஆகியோரும் தலா 2 ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக அந்த அணியின் ஷாஜகான் 43 ரன்கள் எடுத்தார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய காரைக்குடி காளை, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு, காரைக்குடி காளை பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். எனினும், 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அந்த அணியின் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுடனும், ஆகாஷ் சும்ரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடையாமல் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், காரைக்குடி காளை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.