கடந்த 5 - 6 மாதங்களாக, இந்திய அணியின் குறுகிய ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ச்சியாக அஷ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்படாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களும், சிறப்பாகவே பங்காற்றி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட, சாஹல் மற்றும் குல்தீப் மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தனர்.
இந்த நிலையில், இவ்விருவரையும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இணையாக ஒப்பிட்டு, ரசிகர்கள் சமூக தளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சாஹல், "அஷ்வினும். ஜடேஜாவும் கடந்த 5-6 ஆண்டுகளாக அணிக்கு எவ்வளவோ செய்துள்ளனர். ஆனால், நாங்களோ வெறும் 4-5 தொடர்களை மட்டுமே விளையாடி இருக்கிறோம். எங்களை அவர்களுடன் ஒப்பிடுவது அழகல்ல.
எப்போதெல்லாம் அணிக்காக ஆடுகிறோமோ, அப்போதெல்லாம் எங்களது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். இப்போதே அவர்களுடன் ஒப்பிடுவது நியாயமாகாது. நாங்கள் இந்தியாவில் தான் அதிகம் விளையாடி இருக்கிறோம். ஒரேயொரு முறை மட்டும் இலங்கையில் ஆடி இருக்கிறோம். இலங்கையும், இந்திய ஆடுகள தன்மையையே கொண்டிருக்கும். அதை தவிர்த்து, இதுவரை நாங்கள் வேறு நாடுகளில் சென்று கிரிக்கெட் ஆடவில்லை.
இலங்கைக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், மிடில் ஓவர்களில் பந்துவீசி தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். இதனால், இலங்கை சற்று பதற்றமானது. அப்போது ஒரு ஸ்லிப் வைத்து பவுல் செய்ய முடிவெடுத்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில் ஸ்லிப் வைத்து ஆடுவது சிறந்தது. ஏனெனில், நிரோஷன் டிக்வெல்லா அடித்த ஷார்ட், ஸ்லிப் இல்லையெனில் பவுண்டரி சென்று இருக்கும். 2-வது போட்டியிலும் டிக்வெல்லா அதேபோன்றதொரு ஷார்ட்டை அடித்து இருந்தார். எங்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா பயமில்லாமல் எங்களை பந்து வீசச் சொன்னார்.
மேத்யூசின் எனது விக்கெட் மிகவும் சிறப்பானதாகும். தவறான லைனை தேர்வு செய்து அவர் போல்டானார். அப்போட்டியில் எனது சிறந்த பந்துவீச்சு அதுவேயாகும்" என்றார்.