Vijayhazare trophy cricket news in tamil: விஜய்ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தோரில் உள்ள டேலி கல்லூரி மைதானதில் தமிழகம் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வென்றது.
முதலில் களமிறங்கிய தமிழக அணி மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபராஜித் மற்றும் ஜெகதீசன் அதிரடி காட்டினர். அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்த ஜெகதீசன் அனுகுல் ராய் வீசிய 16.3 ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பிரதோஷ் ரஞ்சன் பால், மற்றும் இந்திரஜித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாருக் கான் விக்கெட்டுகள் சரிவை மீட்டு, மறுமுனையில் இருந்த துவக்க வீரர் அபராஜித்துடன் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில், ஜார்க்கண்ட் அணியின் நதீம் வீசிய 34.4 ஓவரில் துவக்க வீரர் அபராஜித் ஆட்டமிழந்தார். 105 பந்துகளை சந்த்திருந்த அபராஜித் 6 பவுண்டரிகளை விளாசி 57 ரன்கள் சேர்த்திருந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கௌசிக் மறுமுனையில் இருந்த ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 42 ஓவர்களில் 181 ரன்கள் சேர்ந்திருந்தது. அரைசதம் கடந்திருந்த ஷாருக்கான் 47 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய கௌசிக் 40 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 55 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் கிஷோர் (29), முகமது (20) ஜோடி 50 ஓவர்கள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தமிழக அணி 266 ரன்கள் சேர்ந்திருந்தது.
ஜார்க்கண்ட் அணியில் சிறப்பாக பந்து வீசிய அனுகுல் ராய் 3 விக்கெட்டுகளையும், ஆரோன், நதீம், பால்கிருஷ்ணா, மற்றும் உத்கர்ஷ் சிங் தலா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான இஷான் கிஷான் பூஜ்ய ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடந்தார். மறுமுனையில் நின்ற உத்கர்ஷ் சிங், இஷான் கிஷான் விக்கெட்டு பின்னர் களமிறங்கிய குமார் தியோப்ராட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடந்து களமிறக்கிய விராட் சிங் மற்றும் சுமித் குமார் விக்கெட் சரிவை தடுத்து, அணிக்கு ரன்களை சேர்க்க துவங்கினர்.
விராட் சிங் (49) சாய்கிஷோர் வீசிய 24.2 ஓவரிலும், சுமித் குமார் (40) சித்தார்த் வீசிய 49.5 ஓவரிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிரங்கியவர்கள் சொற்ப ரங்களில் அவுட் ஆகி வெளியேற, ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வென்றது.
தமிழக அணியில் சிறப்பாக பந்து வீசிய மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், அபராஜித் மற்றும் சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது மற்றும் சாய்கிஷோர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
கடந்த போட்டியில் ஆந்திர அணியுடன் தோல்வியை சந்தித்த தமிழக அணி இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.