Mehidy Hasan Bangladeshi cricketer Tamil News: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து மிரட்டியுள்ளார் வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த அவரது அணியினர், பேட்டிங்கில் படுசொதப்பல் காட்டினார். தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் (11) மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் (7) சொந்த மண்ணில் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க தடுமாறினர். அவர்களது விக்கெட்டுக்குப் பிறகு களமாடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ (21), ஷாகிப் அல் ஹசன் (8) மற்றும் அபிஃப் ஹொசைன் (0) போன்ற முன்னணி வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி, நாகினி டான்ஸ் போடும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தனர்.
ஆனால், இதற்குப்பிறகு களம் கண்ட வீரர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பதை இந்தியா அறிந்திருக்கவில்லை போலும். களத்தில் ஜோடி கட்டி ஆட்டம் காட்ட தொடங்கி இருந்தனர் மஹ்முதுல்லா – மெஹிதி ஹசன் மிராஸ். இருவரும் தங்கள் அதிரடியால் வான வேடிக்கை காட்டவில்லை என்றாலும், இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்கத் தொடங்கி இருந்தனர். மேலும், 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த அவர்களது அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். அத்துடன் இருவருமே அரைசதம் அடித்தும் அசத்தினர்.

96 பந்துகளில் 7 பவுண்டரிகளை மட்டும் விரட்டிய மஹ்முதுல்லா 77 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால், தனது தரமான ஆட்டத்தால் டாக்கா மைதானத்தில் நங்கூரமிட்டு, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வந்த மெஹிதி தனது முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசி மிரட்டினார். அவரின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டம் வங்கதேசம் 271 ரன்கள் என்ற ஃபைட்டிங் ஸ்கோரை எடுக்க உதவியது. கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்த மெஹிதி 83 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 100 ரன்கள் எடுத்தார்.
மெஹிதி களமிறங்கிய போதே இந்தியா
“ஒருவேளை மக்கள் என்னை பஹல் (பைத்தியம்) என்று அழைப்பார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற நேர்மையான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இதை என்னால் செய்ய முடியும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்” என்று தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் மெஹிதி கூறியிருந்தார்.
மெஹிதி இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில், எட்டாவது அல்லது அதற்கும் குறைவான இடத்தில் பேட்டிங் செய்யும் (லோ-ஆடரில்) வீரர்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், அயர்லாந்தின் சிமி சிங் கடந்த ஆண்டு டப்ளினில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து, இப்படியொரு சாதனையைப் பதிவு செய்து இருந்தார். தற்போது அதை மெஹிதி முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மெஹிதி ஹசன் மிராஸ். இந்தியாவுக்கு எதிராக ஒரு வீரர் அசத்தலாக பேட்டை சுழற்றும் போது அவர் குறித்து அறிந்துகொள்வது அவசியம். அவ்வகையில், மெஹிதி-யின் கிரிக்கெட் பின்னணி குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
யார் இந்த மெஹிதி?
மெஹிதி ஹசன் மிராஸ் அக்டோபர் 25, 1997ல் பாரிசாலில் பிறந்தார். ஆனால், அவர் வளர்ந்தது குல்னா நகரின் புறநகரில் உள்ள தௌலத்பூரில் தான். அவர் தனது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். எனினும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட பேரார்வம் அவரை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கியது.
மெஹிதி தனது தலைமுறையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்பட்ட முன்னாள் வங்கதேச வீரர் ஷேக் சலாஹுதீனிடம் இருந்து பந்தை சுழற்றக் கற்றுக்கொண்டார். 2014 ஆம் ஆண்டில் 16 வயதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வங்கதேச கேப்டனாக அணியை வழிநடத்தினர். மேலும், நாட்டின் பிரகாசமான இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் உருவெடுத்தார்.
பின்னர், 2016 ஆம் ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கும் வங்கதேச கேப்டனாக மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் U19 அணியிடம் தோற்று வெளியேறியது.
மெஹிதியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பது தான். இந்திய அணிக்கு எதிராக பேட்டிங்கில் ஜொலித்த அவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான மற்றும் முதல்தர நிலை போட்டிகளில் விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தியுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஜொலித்தால் அவருக்கான ஐ.பி.எல் வாய்ப்பு வீடு தேடி செல்லும் என்றால் மிகையாகாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil