உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அதில், இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் உள்ளிட்ட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிரிஸ்டி கில்மோர் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், 21-19 18-21 21-15 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார்.
அதேபோல், மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, ஐந்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் சுன் யு-வை எதிர்கொண்டார். அதில், 21-14, 21-9 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பிவி சிந்துவும் அரையிறுதிக்கு முன்னேறினார்
காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், அரையிறுதிப் போட்டியில் வெவ்வேறு நாட்டு வீராங்கனைகளை அவர்கள் எதிர்கொண்டனர். அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சாய்னா நேவால் தோல்வியடைந்தார். இதனால், சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிட்டியது.
இதையடுத்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, பத்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை எதிர்கொண்டார்ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து, 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.
இறுதி போட்டியில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகாராவுடன், பி.வி.சிந்து மோத உள்ளார். ஏற்கனவே 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர். தற்போது இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.