இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது சகோதரரின் மனைவி புகார் தெரிவித்துள்ளார். மாடல் அழகியும் இந்தி நடிகையுமான ஹாசல் கீச்சை, யுவராஜ் சிங் திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு இந்த தீபாவளி தலை தீபாவளியாக அமைந்தது.
யுவராஜ் சிங் சசோதரர் சோரவர் சிங். இந்த நிலையில்,இவரது மனைவி ஆகான்ஷா சர்மா, கணவர் சோரவர் சிங், மாமியார் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மீது புகார் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகாரில் தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாக ஆகான்ஷா சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரும் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி குர்கான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வரும் 21-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால், இந்த புகாரை சோரவர் சிங் மற்றும் ஆகான்ஷாவின் மாமியார் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இது குறித்து அகான்ஷா சர்மாவின் வழக்கறிஞர் கூறும்போது: குடும்ப வன்முறை என்றால் உடல் ரீதியிலான தாக்குதல் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக, பணம் கேட்டும், மன ரீதியிலான அழுத்தம் கொடுப்பதும் குடும்ப வன்முறையாகும். குடும்பத்தில் இவ்வாறு பிரச்சனை இருக்கும் போது, பார்வையாளர் போல யுவராஜ் சிங் வேடிக்கை பார்த்திருக்கிறார் என்றார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுட்மபோது: புகார் எங்களிடம் நேரடியாக அளிக்கப்படவில்லை. அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து எந்தவித உத்தரவும் எங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கவில்லை என்றார்.