தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி 96.2 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 92.5 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.08% அதிகமாகும்.
தேர்ச்சி விகிதத்தில், பன்னிரெண்டாம் வகுப்பைப் போல பத்தாம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
செண்டம் பெற்றவர்கள் விவரம்:
தமிழ் - 69
ஆங்கிலம் - 0
கணிதம் - 13.759
அறிவியல் - 17,841
சமூக அறிவியல் - 61,115
481-க்கு மேல் பெற்றவர்கள் - 38,613
451-க்கு மேல் பெற்றவர்கள் - 1,22,757
426-க்கு மேல் பெற்றவர்கள் - 1,13,831
401-க்கு மேல் பெற்றவர்கள் - 1,11,266
முன்னதாக, பொதுத்தேர்வுகளுக்கு இனி ரேங்கிங் முறை கிடையாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், கடந்த வாரம் வெளியான +2 தேர்வு முடிவின் போது, மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல், இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் ரேங்கிங் வெளியிடப்படவில்லை.
ஒரு சில மாணவர்களின் பெயர்களை ரேங்க் வரிசையில் தெரிவிக்கும் போது, மற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்ற காரணத்துக்காகத்தான், அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், பள்ளியளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் போது, அதே சூழல் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இன்று வெளியாகியுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் விபரங்களையும் வெளியிடக்கூடாது என, பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.