1500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதலுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 1500 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது.
அந்த ஒப்பந்தப் புள்ளியின் வாயிலாக கீழ்க்கண்ட 16 நிறுவனங்களிடமிருந்து 1500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை யூனிட் ஒன்றிற்கு 3 ரூபாய் 47 பைசா என்ற விலையின் அடிப்படையில் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த வகையில் நிறுவப்படவுள்ள 16 சூரிய சக்தி நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில், ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 6 கோடிவீதம், மொத்தம் 1500 மெகாவாட்டிற்கு ரூ.9000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் 1747 திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. மேலும், இந்த ஆண்டிற்குள் 700 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படவுள்ளது. அதனுடன், தற்போது நிறுவப்படவுள்ள 1500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கான சூரிய சக்தியின் நிறுவுத்திறன் 2021-க்குள் கூடுதல் இலக்கான 5000 மொகாவாட் என்ற இலக்கை அடைந்திட வழிவகை ஏற்படும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் என்.எல்.சி. இந்தியா லிமிடெட், இராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், நர்பேராம் விஸ்ராம் மற்றும் என்வீஆர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மீதமுள்ள 12 சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் சூரியசக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் 30.9.2017-க்குள் கையெழுத்திடவுள்ளன.
நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.