சென்னையில் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று, காதலனின் திருமணத்தை பெண் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 25 வயது பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டதாரியான இவர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். பிரியாவும், அதே மையத்தில் பயிற்சி பெற்ற சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான சத்தியமூர்த்தி, வேலூர் சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்களுடைய திருமணத்திற்கு சத்தியமூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோரின் சம்மதமின்றி வேலூர் அருகே உள்ள முருகன் கோவிலில் கடந்த 19-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதை நம்பி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றார் பிரியா. ஆனால், அங்கு சத்தியமூர்த்தி வரவில்லை. இதனால், பிரியா பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சத்தியமூர்த்தி தனது பெற்றோருடன் பிரியாவின் வீட்டுக்கு சென்று, தனக்கு மதுரையில் உறவுக்கார பெண்ணுடன் 22-ஆம் தேதி (இன்று) திருமணம் நடைபெற உள்ளதாக கூறி பத்திரிக்கை கொடுத்துள்ளார்.
இதனால், மேலும் அதிர்ச்சிக்குள்ளான பிரியா, காதலன் முன்பு பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, அவரை காப்பாற்றி உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சத்தியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நேற்றிரவு அவரை கைது செய்தனர். இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த சத்தியமூர்த்தியின் திருமணம் நிறுத்தப்பட்டது.