சென்னை அடையாரில் டிடிவி தினகரனை அவரது வீட்டில் நேற்று 27 எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் இன்று முதல் ஆளாய் தினகரனை சந்தித்துள்ளார். தொடர்ந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து பேசினர். இதனால், தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தற்போது 31-ஆக அதிகரித்து உள்ளது.
மேலும், 50 எம்.எல்.ஏக்கள் இன்று தினகரனை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்திப்பதில் தவறும் ஏதும் இல்லையே.. அவர்கள் துணைப் பொதுச்செயலாளரைத்தானே பார்த்தார்கள். வேறு யாரையும் பார்க்கவில்லையே. நாங்களும் நேரம் கிடைக்கும்போது தினகரனை சந்தித்துப் பேசுவோம். எங்களுடைய பொதுச் செயலாளர் சசிகலாதான். கட்சியில் பெரிய பிரச்னைகள் என்று எதுவும் இல்லை. இருக்கின்ற சிறு சிறு பிரச்சனைகளும் விரைவில் சரி செய்யப்படும். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் உடனடியாக நடக்கவாய்ப்பில்லை" என்றார்.