திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த பள்ளப்பட்டியில் கள்ளச்சாராய விற்பனை மறைமுகமாக நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயச்சந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றுள்ளார். அதை பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாய்ராம், முருகன், தங்கபாண்டியன் ஆகிய மூவரும் வாங்கிக் குடித்துள்ளனர்.
குடித்த சிறிது நேரத்திலேயே 3 பேரும் கடும் வயிற்றுவலியால் அலறித் துடித்துள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாய்ராம், முருகன் இருவரும் உயிரிழந்தனர். தங்கபாண்டியனின் அலறல் சத்ததைக் கேட்டு ஓடிய பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு, அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தங்கபாண்டியன் உயிரிழந்தார்.
உயிரிழந்த சாய்ராம் மற்றும் முருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்தது திண்டுக்கல் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.