தமிழகத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றும் வெ.இறையன்பு நாளை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989ல் தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். 2016ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கிய சிவ்தாஸ் மீனா, நாகை ஆட்சியராகவும் பணியாற்றினார். மேலும், போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, அடுத்த தலைமை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
2021-ம் ஆண்டு திமுக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதில், மாநில தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை ஒய்வு பெறுகிறார்.
இவரையடுத்து, புதிய தலைமைச் செயலர் யார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil