சென்னை, மடிப்பாக்கம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று (ஏப்.5) பங்குனி உத்திரம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சுவாமிப் பல்லக்கு மூவரசம்பேட்டை பகுதியிலுள்ள கோயில் குளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நேரத்தில் கோவில் குருக்களுடன் தன்னார்வலர்களும் குளத்தில் இறங்கினர்.
அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கினார், அவரை காப்பாற்ற சென்ற 4 பேர் ஒன்றன் பின் ஒருவராக குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சகர்கள் ராகவன் (18), மணிஷ் (18), பானேஷ்( 20), யோகேஸ்வரன் (23), சூர்யா (24) எனத் தெரியவந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வேளச்சேரி, கிண்டி பகுதி தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், விபத்து நடந்த குளத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
ஒருவர் நீரில் மூழ்கிய போது மற்றவர்கள் காப்பாற்ற முனைந்துள்ளனர். இதனால் அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அடுத்தடுத்த விசாரணையின்போது முழுமையான தகவல்கள் வெளிவர வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“