Advertisment

வாலிபரை சிறையில் வைத்து சித்ரவதை செய்த போலீசார்!

எந்த காரணமும் கூறாமல் காவல் துறையினர் கைது செய்து, நான்கு நாட்கள் அடித்து தாக்கி, உணவு, குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாலிபரை சிறையில் வைத்து சித்ரவதை செய்த போலீசார்!

எந்த ஒரு காரணமும் கூறாமல் வாலிபரை கைது செய்து, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் விசாரணை செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்த நூர் பாஷா என்பவரின் 21 வயது மகன் ஷேக் ஷாகுல் ஹமீது என்பவரை, எந்த காரணமும் கூறாமல் காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம் காவல் துறையினர் கைது செய்து, நான்கு நாட்கள் அடித்து தாக்கி, உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் துறையினர் தாக்கியதால் தன் மகனுக்கு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நூர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷாகுல் ஹமீதை, அரசு செலவில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.

அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த அறிக்கையில், ஷாகுல் ஹமீதின் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டதால் அவை அழுகிய நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஷாகுல் ஹமீது தாக்கப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனை நியமித்து, நீதிபதி ராஜீவ் ஷக்தேர், நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ராமநாதன் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான ஆவணங்களை காவல் துறையினரும், நடுவர் நீதிமன்றமும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment